பொங்கல் ஸ்பெஷல்: மதுரை-சென்னை சிறப்பு ரயில்
சென்னை: பொங்கலை முன்னிட்டு மதுரை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் 12ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து (எண் 0632) காலை 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் வரும் 13ம் தேதி, சென்னை எழும்பூரில் இருந்து (எண் 0631) காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மதுரைக்கு சென்றடையும்.
இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று (7ம் தேதி ) முதல் தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ரயிலில் எலி-பூச்சி தொல்லை-வேலு கவலை:
சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே பேசின்பிரிட்ஜ் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையின் நூற்றாண்டு விழா பணிமனை வளாகத்தில் நடந்தது.
இதில், ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு பேசுகையில்,
தெற்கு ரயில்வேயில் 4,400 ரயில் பெட்டிகள் உள்ளன. இதில், 1,040 பெட்டிகளை இந்த பணிமனையில் பணியாற்றும் 2,400 ஊழியர்கள் பராமரிக்கின்றனர்.
இந்தியா முழுவதும் தினமும் 9 ,000 ரயில்களை இயக்குகிறோம். இதில் 1.8 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.
ரயில் பெட்டிகளில் எலிகள், கரப்பான் பூச்சிகள் தொந்தரவு அதிகமாக உள்ளது. அவற்றை ஒழிக்க வேண்டும் என்று நிறைய கோரிக்கைகள் வருகின்றன. குறிப்பாக தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் எலி, கரப்பான் பூச்சிகள் தொந்தரவு அதிகமாக உள்ளதாகக் கூறுகிறார்கள்.
இவற்றை ஒழிக்க புகை அடித்தல், எலியை உயிரோடு பிடித்து அழித்தல் என்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தாலும் இவற்றை 100 சதவீதம் ஒழித்தால்தான் பயணிகள் நிம்மதியாக பயணிக்க முடியும்.
ரயில் பெட்டி கழிப்பறையில் இருந்து கொட்டும் கழிவுகளால் ரயில் நிலையங்களில் துர்நாற்றம் அடிப்பதுடன் அருவறுப்பாகவும் உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக கழிப்பறையில் இருந்து கழிவுகள் ரயில் தண்டவாளத்தில் விழாமல் இருப்பதற்காக புதிய முறை (கன்ட்ரோல்டு டிஸ்சார்ஜ் சிஸ்டம்) சதாப்தி, ராஜதானி ரயில்களில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்படி, ரயில் நிலையத்தைத் தாண்டி 30 கிமீ வேகத்தில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது கழிவறையில் தேக்கி வைக்கப்பட்ட கழிவுகள் தானாகவே தண்டவாளத்தில் கொட்டப்படும். வரும் காலத்தில் அனைத்து ரயில்களிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications