நாகை: வழி தவறி வந்த கடற்படை அதிகாரிகள்?
நாகை: நாகை மாவட்டம் விழுந்தமாவடி என்ற இடத்தில் வழி தவறி இறங்கிய கடற்படையினர் மூவரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதால் இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகள் தப்பி வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய கடலோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் அன்னியர்கள் நடமாட்டம் உள்ளதா என்று கடலோர காவல்படையின் ஒரு பிரிவான கடலோர போலீஸ், கியூ பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுந்தமாவடி அருகே மணமேடு கிராமத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் 3 பேர் நடமாடுவதாக அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அந்த மூன்று பேரையும் நாகை கியூ பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து பின்னர் போலீஸ் தரப்பில் கூறுகையில், ராமேஸ்வரம் பகுதியில் பணியில் உள்ள கடற்படை அதிகாரிகள் விமானத்தில் வந்தனர். அவர்கள் நாகையில் இறங்குவதற்கு பதிலாக வழித்தவறி விழுந்தமாவடி பகுதியில் இறங்கிவிட்டனர். இருப்பினும் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
ஆனால் போலீசார் பிடித்துசென்ற 3 பேரும் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என மீனவர்கள் கூறுகிறார்கள்.