சென்செக்ஸ்: இன்றும் எழவிடாத சத்யம்!
மும்பை: சத்யம் முறைகேடுகளால் புதன்கிழமை விழுந்த அடியிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறது இந்தியப் பங்குச் சந்தை.
இன்று காலையிலிருந்தே மிக பலவீனமாகத் துவங்கிய சென்செக்ஸ் மற்றும் நிப்டியில் தொடர்ந்து மோசமான போக்கே நிலவுகிறது.
ரியல் எஸ்டேட், மூலதனப் பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் மற்றும் ஐடி நிறுவனப் பங்குகள் ஆட்டம் கண்டுள்ளன.
முடிந்தவரை அனைத்துத் துறை பங்குகளையும் விற்பதில்தான் முதலீட்டாளர்கள் குறியாக உள்ளனர். கார்ப்பரேட் நிர்வாகங்கள் மீது மக்கள் முழுமையான நம்பிக்கையை இழந்துவிட்டதன் அறிகுறியே இது என நிப்டி கருத்து தெரிவித்துள்ளது. இந்த அபரிமிதமான பங்கு விற்பனையைத் தடுக்காவிட்டால், சந்தையின் சமநிலைத் தன்மை போய்விடும் அபாயம் உள்ளது.
இரண்டாம் நிலைப் பங்குகளை வாங்க எந்த முதலீட்டாளரும் ஆர்வம் காட்டவே இல்லை. முடிந்தவரை அவற்றை முழுவதுமாகவே விற்றுக் காசாக்கப் பார்க்கிறார்கள். இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஐடி கறுப்பு ஆடுகள்!
இன்னொரு பக்கம் சத்யம் ஏற்படுத்தியுள்ள இந்த மோசமான சூழலைப் பயன்படுத்தி தங்கள் நிறுவன பங்குகள் விலையை உயர்த்த சில 'ஐடி கறுப்பு ஆடுகள்' முயன்று வருகின்றன.
சத்யம் நிறுவனத்தின் முக்கிய கிளையண்டுகள் எங்களிடம்தான் வரப்போகிறார்கள் என்ற ரீதியில் தொடர்ந்து வதந்தியைப் பரப்பி தங்கள் பங்கு மதிப்பைக் கூட்டப் பார்க்கின்றனர்.
நிலைமை சீராகும் என்ற நம்பிக்கை உள்ளது. வதந்தி பரப்புபவர்கள் மற்றும் அவர்களின் பின்னால் உள்ள நிறுவனங்களை செபியின் கிரமினல் புலனாய்வுக் குழு கண்காணித்து வருவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்யம் பங்கு விலை ரூ.6.30!!
இன்றைய இன்ட்ரா டே (நாள் வர்த்தகம்) பரிமாற்றத்தில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் மிகமிகக் குறைந்த அளவான ரூ.6.30க்கு விலைபோயின.
இது அந்த நிறுவனப் பங்குகளின் முக மதிப்பை விட குறைவு என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலை தொடர்ந்தால் அந்த பங்குகளின் மீது வர்த்தகம் நடப்பதையும் செபி தடை செய்யக்கூடும். ஏற்கெனவே சென்செக்ஸ், நிப்டியின் பெஞ்ச்மார்க் ஷேர் பட்டியலிலிருந்து சத்யம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையில் இந்நிறுவனம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி சென்செக்ஸில் 255 புள்ளிகள் சரிந்துவிட்டது. நிப்டியில் 80 புள்ளிகள் சரிந்துள்ளன.
ரிலையன்ஸ், டிஎல்எப், யுனிடெக் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
டிசிஎஸ் மற்றும் இன்போஸிஸ் பங்குகளில் மட்டும் ஓரளவு முன்னேற்றம் தெரிந்துள்ளது. அதுகூட, சத்யம் வாடிக்கையாளர்கள் இன்போஸிஸ், டிசிஎஸ் வசம் வரப்போகிறார்கள் என்ற வதந்தி காரணமாகவும் இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
பிற்பகல் 12.30 மணி சந்தை நிலவரம்: சென்செக்ஸ்: 9331.84 ( -255.04) நிப்டி: 2839.75 (-80.65)