For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் பதவி: அத்வானிக்கு போட்டியாக ஷெகாவத்

By Sridhar L
Google Oneindia Tamil News

டெல்லி: அத்வானியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு அக் கட்சியின் மூத்த தலைவரான பைரோன்சி்ங் ஷெகாவது கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதியாக இருந்த ஷெகாவத் சில காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். ஆனால், சமீபகாலமாக மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்பியுள்ளார்.

ராஜஸ்தானில் பாஜக முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியாவின் செயல்பாடுகளை அவர் விமர்சித்து வந்தார். மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜேவுக்கு எதிராக ஷெகாவத் ஆதரவாளர்கள் செயல்பட்டு கட்சியின் தோல்விக்கும் ஒரு காரணமாக இருந்தனர்.

இந் நிலையில் அத்வானிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார் ஷெகாவத்.

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், அத்வானியால் தேசிய ஜனநாயக முன்னணியை ஒற்றுமையுடன் வைத்திருக்க முடியாது, யாரைக் கேட்டு அவரை பிரதமர் வேட்பாளராக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார் தெரியவில்லை என்று கேள்வி எழுப்பி பாஜகவுக்குள் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளார்.

இது போதாது என்று ராஜஸ்தானின் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலோட்டுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார் ஷெகாவத். அதில், முந்தைய பாஜக அரசு செய்த ரூ. 22,000 கோடி ஊழல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி முன்னாள் முதல்வர் வசுந்தரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

அத்வானியின் ஆதரவோடு வசுந்தரா ஓவர் ஆட்டம் போட்டதையும், ராஜஸ்தானில் தன்னை கட்சி ஒதுக்கி வருவதையும் மனதில் கொண்டே ஷெகாவத் இந்த பதிலடியி்ல் இறங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அத்வானிக்கு எதிராகக் கிளம்பியுள்ள ஷெகாவத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் பாஜக உள்ளது. ராஜஸ்தான், ஹரியாணாவில் பெருவாரியாக உள்ள ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவரான ஷெகாவத்தை கட்சி ஒதுக்க முடியாது. இந்த சமூகத்தினரின் பெருமபான்மை ஆதரவு அவருக்கு உண்டு.

மேலும் ஷெகாவத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆதரவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அத்வானி தரப்பு கடும் எரிச்சலிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளது.

ஷெகாவத்தை அமைதியாக்கும் முயற்சியில் அத்வானி தரப்பு இறங்கியுள்ளது. அத்வானியின் ஆதரவாளரான பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், நேற்று இரவு மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் வீட்டில் வைத்து ஷெகாவத்தைச் சந்தித்து அவரை சமாதானப்படுத்த முயன்றார்.

பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்ததாக ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறிவிட்டு அந்தப் பக்கம் செல்ல, அடுத்து நிருபர்களை சந்தித்த ஷெகாவத், பிரச்சனை எதுவும் தீரவில்லை. அப்படியே தான் உள்ளது. நானும் மக்களவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். பிரதமர் பதவிக்கும் நான் போட்டியிடுவேன் என்று 'கிளஸ்டர் பாம்களை' தூக்கிப் போட்டுவிட்டுச் சென்றார்.

மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு சில வாரங்களில் வெளியாகயுள்ள நிலையில் பாஜகவுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதல் அந்தக் கட்சியை பெரும் அதிரிச்சியில் தள்ளியுள்ளது.

ராஜ்நாத் சிங் கூறுகையில், கங்கையில் குளித்தவர்கள் (துணை ஜனாதிபதியாக இருந்தவர்) உள்ளூர் கிணற்றில் குளிப்பதற்காக ஏங்கக் கூடாது என்றார்.

பதிலுக்கு ஷெகாவத் கூறுகையில், கட்சியில் வாஜ்பாயும் நானும் தான் மூத்த தலைவர்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன். வாஜ்பாய் கூட, அவருடைய உடல்நிலை நன்றாக இருந்தால் போட்டியிடலாம். கட்சி என்னை தடுத்தாலும் தேர்தலில் போட்டியிடுவேன்.

நான் பலமுறை கங்கையில் மட்டுமல்ல, கிணறுகளிலும் குளித்திருக்கிறேன். தொடர்ந்து நீராடுவேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X