லக்ளெனவில் சமாஜ்வாடி சார்பில் சஞ்சய் தத் போட்டி
மும்பை: வரும் மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தொகுதியான லக்ளெனவில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் சஞ்சய் தத் போட்டியிடுகிறார்.
இத் தகவலை அக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் அறிவித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அமர் சிங்,
சஞ்சய் தத் குடும்பத்துக்கு அரசியல் புதிதல்ல. அவரது தந்தை சுனில் தத் மும்பையில் காங்கிரஸ் எம்பியாக இருந்தவர். அவரது தங்கை பிரியா தத் இப்போது காங்கிரஸ் எம்பியாக உள்ளார்.
இப்போது காங்கிரஸ் எங்களது கூட்டணிக் கட்சி. இதனால் பிரியாவின் அண்ணனான சஞ்சய் தத் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடுவது காங்கிரசுக்கு நிச்சயம் மகி்ழ்ச்சியைத் தான் தர வேண்டும்.
அவரை உத்தரப் பிரதேசத்தின் மிக முக்கியான தொகுதியான லக்னெளவில் எங்கள் கட்சி களமிறக்குகிறது. அதே போல போஜ்பூரி பட நடிகர் மனோஜ் திவாரியையும் கட்சியின் சார்பில் போட்டியிடச் செய்வோம்.
ஆயுதம் வைத்திருந்ததாக கைதாகி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சஞ்சய் தத்தை தேர்தலில் நிறுத்துவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அனுமதியையும் பெறுவோம்.
அந்த பாஜக எம்பி (நவ்ஜோத் சிங் சித்து) பெரிய கிரிக்கெட் வீரராக இருந்தும், கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி தரப்பட்டது. அதே வகையில் சஞ்சய் தத்தையும் நிறுத்த அனுமதி பெற முயல்வோம். அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைக்காவிட்டாலும் எங்கள் கட்சிக்காக நிச்சயம் பிரச்சாரம் செய்வார்.
ஏற்கனவே இந்தக் கட்சியின் சார்பில் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், ஜெயப் பிரதா ஆகியோர் ராஜ்யசபா எம்பிக்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யாவையும்...
சமாஜ்வாடி தலைவர் முலாயமுக்கு மிக நெருக்கமானவர் அமிதாப் பச்சன். இதனால் அமிதாப்பின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ராயையும் தேர்தலில் நிறுத்த சமாஜ்வாடி முயன்று வருவதாகத் தெரிகிறது.
அமிதாப், முலாயம், அமர் சிங்குக்கு நெருக்கமான அனில் அம்பானியும் கூட ஐஸ்வர்யாவை தேர்தலில் நிறுத்தச் சொல்லி வருவதாகத் தெரிகிறது.
மம்மூட்டியை களமிறக்கும் இடதுசாரிகள்?:
இதற்கிடையே மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை, வரும் லோக்சபா தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் கேரளாவில் போட்டியிட வைக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே இந்தக் கட்சியின் ஆதரவாளரான மம்மூட்டி அந்தக் கட்சி நடத்தும் கைரளி டிவியின் நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார்.
இந் நிலையில் அவரை தேர்தலில் போட்டியிட வைக்கவும் இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவர் ஒப்புக் கொண்டால், எர்ணாகுளம், பொன்னனி, மஞ்சேரி ஆகியவற்றில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.