ஆனையிரவையும் பிடித்து விட்டோம்: இலங்கை ராணுவம்

நேற்று ஆனையிரவுக்கு முன்பாக உள்ள பாளை மற்றும் சோரன்பட்டு ஆகிய ஊர்களைப் பிடித்த இலங்கை ராணுவத்தின் 53,55 மற்றும் 58வது படைப் பிரிவுகள் இன்று ஆனையிரவைப் பிடித்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
3 படைகளும் சேர்ந்து ஆனையிரவை விடுதலைப் புலிகளிடமிருந்து பிடித்துள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
இதன் மூலம் கண்டி - யாழ்ப்பாணம் இடையிலான ஏ-9 சாலை முழுமையாக ராணுவத்தின் வசம் வ்நதுள்ளது.
மேலும், முல்லைத்தீவோடு தற்போது விடுதலைப்புலிகள் சுருக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தீபகற்பத்தின் நுழைவாயிலாக கருதப்படுவது ஆனையிரவு. இந்தப் பகுதியைக் கடந்த 2000மாவது ஆண்டு புலிகளிடம் இழந்தது இலங்கை ராணுவம். தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆனையிரவு ராணுவம் வசம் மீண்டும் வந்துள்ளது.
ஆனையிரவு வீழ்ச்சி குறித்து அதிபர் ராஜபக்சே விரைவில் முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம்தான் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை ராணுவம் பிடித்தது. இந்த நிலையில் தற்போது முக்கியமான ராணுவ தளமாக புலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த ஆனையிரவும் வீழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முல்லைத்தீவுடன் சுருக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் மீது ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளும் சேர்ந்து இறுதித் தாக்குதலைத் தொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனையிரவு வீழ்ச்சி குறித்து இதுவரை புலிகள் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்படவில்லை.
திரிகோணமலை குண்டுவெடிப்பு - 7 பேர் பலி
இதற்கிடையே கிழக்கு திரிகோணமலை மாவட்டத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து 3 ராணுவ வீரர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் உள்பட 7 பேர் பலியானார்கள்.












Click it and Unblock the Notifications