கொழும்பு: சன்டே லீடர் ஆசிரியர் சுட்டுக் கொலை
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாயா ராஜபக்சேவின் ஊழல் குறித்து பகிரங்கப்படுத்திய சன்டே லீடர் இதழின் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா கொழும்பில் நேற்று பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடையாளம் தெரியாத இரு நபர்கள், லசந்தாவை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். படுகாயமடைந்த லசந்தா மருத்துவமனையில் பலியானார்.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே சன்டே லீடர் இதழுக்கும், அதன் ஆசிரியரான லசந்தாவுக்கும் கடும் மிரட்டல்கள் விருந்து வந்தன. அரசு தரப்பு ஊழல்களை சன்டே லீடர் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது. குறிப்பாக கோத்தபாய ராஜபக்சேவின் ஆயுத பேர ஊழல்களையும் லசந்தா பகிரங்கமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து லசந்தாவை அதிபர் ராஜபக்சே, பயங்கரவாத பத்திரிக்கையாளர் என கடுமையாக விமர்சித்தார். கோத்தபாய ராஜபக்சே, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த பின்னணியில்தான் நேற்று லசந்தா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
லசந்தாவின் படுகொலையால் இலங்கை மீடியா வட்டாரம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. தங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினம் முதல்தான் இலங்கை ஊடகவியல் துறையை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டார் அதிபர் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்றுதான் தமிழருக்குச் சொந்தமான மகாராஜா டெலிவிஷன் நெட்வொர்க் நிறுவனத்தை ஒரு கும்பல் அடித்துச் சூறையாடியது என்பது நினைவிருக்கலாம்.
இந்த டிவி நிலையத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் லசந்தா விக்கிரமதுங்கா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications