கருணாநிதிக்கு தெரியுமா தெரியாதா?- ஜெயலலிதா
சென்னை: தான் சொன்னால் கேட்கக் கூடிய மத்திய அரசு தான் தற்போது ஆட்சி செய்கிறது என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதிக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் நிலவும் பிரச்சனை தெரியுமா, தெரியாதா என்ற அளவிற்கு குடும்பப் பிரச்சனைகளில் மூழ்கியிருக்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் அளவுக்கு குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடைய கோரிக்கையில் உள்ள நியாயத்தை மத்திய அரசு உணர்ந்து, அதை நிறைவேற்றி இருந்தால், இன்று இந்தியாவே ஸ்தம்பிக்கும் அளவுக்குப் போராட்டமும் வெடித்து இருக்காது; அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இந்த அளவுக்கு உயர்ந்திருக்காது.
இதனால் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியுமா என்ற கேள்விக்குறியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டும் இது குறித்து மத்திய அரசு கவலைப்படாமல் இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
தான் சொன்னால் கேட்கக் கூடிய மத்திய அரசு தான் தற்போது ஆட்சி செய்கிறது என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழகத்தில் நிலவும் பிரச்சனை தெரியுமா, தெரியாதா என்கிற அளவிற்கு குடும்பப் பிரச்சனையில் மூழ்கி இருக்கிறார்.
தற்போது நிலவும் அசாதாரணமான நெருக்கடி நிலையை உடனடியாகப் போக்கும் வகையில், லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றி, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் இயல்பு நிலை மீண்டும் திரும்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications