சத்யம் மீது அமெரிக்காவில் 12 வழக்குகள்!
மும்பை: அமெரிக்காவில் மட்டும் இதுவரை சத்யம் நிறுவனத்தின் மீது 12 மோசடி வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் சத்யம் நிறுவனத்தின் அமெரிக்க வைப்பு ரசீதுகளை வாங்கியோர் இப்போது வழக்குத் தொடர்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் இல்லாத வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்க இந்த அமெரிக்க வைப்பு ரசீதுகள் அவசியம்.
அமெரிக்க பங்குச் சந்தை விதிகளை மீறியதற்காகவும், அல்லாத மதிப்பை இருப்பதாக பொய் கூறி வைப்பு ரசீதுகளை விற்றதாகவும் சத்யம் மீது நியூயார்க், டெக்சாஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது.
சத்யம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளோர் பட்டியலில் லேட்டஸ்ட் போமரெண்ட்ஸ் நிறுவனம்.
சத்யம் நிறுவனம் அமெரிக்காவின் பங்குச் சந்தை விதிகளை எப்படியெல்லாம் மீறியுள்ளது, அமெரிக்காவில் எங்கெல்லாம் சொத்துக்களை வாங்கியுள்ளது போன்றவை குறித்து போமெரண்ட்ஸ் எனும் நிறுவனம் தனியாக புலனாய்வு செய்து வருகிறது.
ஏற்கெனவே இஸ்ரேல் நோபல், ஹர்வுட் ஃபெஃபர், பிங்கெல்ஸ்டீன் தாம்ஸன். டையர் அண்ட் பெரன்ஸ், பிராட்ஸ்கி அண்ட் ஸ்மித், பிராவ்ல்டி லா பர்ம், பெடர்மன் அண்ட் ஷெர்வுட் சிஸ்டம்ஸ், மற்றும் க்ளான்ஸி பிங்கோ அண்ட் கோல்ட்பெர்க் ஆகியோர் சத்யம் மீது நியூயார்க், டெக்ஸாஸ் நகர கோர்ட்டுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சத்யம் ராஜு சகோதரர்களை கைது செய்து அமெரிக்க சட்டப்படி விசாரித்து தண்டனை வழங்க வேண்டும், சொத்துக்களைப் பறிமுதல் செய்து நஷ்ட ஈடு தரப்பட வேண்டும் என்று அந்த வழக்கு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.