திருமங்கலம்: நாளை வாக்கு எண்ணிக்கை
மதுரை: திருமங்கலம் தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்படுகிறது. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீர. இளவரசன் மரணமடைந்த தையடுத்து இத்தொகுதியில் ஜன ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், திமுக சார்பில் லதா அதியமான், தேமுதிக சார்பில் தனப்பாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உள்பட 26 பேர் போட்டியிட்டனர்.
வாக்குப் பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் மதுரை கொண்டு செல்லப்பட்டு, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
மொத்தம் 389 மின்னணு வாககுப்பதிவு இயந்திரங்களும், 190 கட்டுப்பாட்டு கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறை சீலிடப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவக் கல்லூரியின் நுழைவாயில் முதல் மின்னணு இயந்திரங்கள் உள்ள அறை வரை நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிக்குள் வெளியாட்கள் நுழைய தடைசெய்யப்பட்டுள்ளது. கல்லூரியைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி ஊழியர்கள் அடையாள அட்டை காட்டிய பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்.
பாதுகாப்பு பணிகளை சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் பார்வை யிட்டார்.
நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 11 மணியளவில் முடிவு தெரிய வரும் என்று தெரிகிறது.
கூடுதலாக பதிவான 178 ஓட்டுக்கள் ...
இதற்கிடையே, வாக்காளர்கள் எண்ணிக்கையையும் தாண்டி கூடுதலாக 178 ஓட்டுக்கள் பதிவாகியிருப்பதை தேர்தல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
திருமங்கலம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 1,55,647. இதில் 1,38,365 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து 88.89 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிகளில் எந்த ஆவணத்தைக் காட்டி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர் என்பதை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, சில வாக்குச் சாவடிகளில் கூடுதலான வாக்குகள் (அதாவது வாக்காளர் எண்ணிக்கையை விட) பதிவாகியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கூடுதலாக பதிவான 178 வாக்குகள் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு சதவீதம் 88.78 சதவீதம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.