லாரி ஸ்டிரைக்கால் உற்பத்தி பாதிப்பு: பல தொழிற்சாலைகள் மூடல் - கரும்பு வரத்து பாதிப்பு!
சென்னை: தொடர்ந்து வரும் லாரி ஸ்டிரைக் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகளுக்கு பத்து நாள் வரை விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டுள்ளன.
அகில இந்திய அளவில் நடந்து வரும் லாரி ஸ்டிரைக் 6வது நாளாக தொடர்ந்தது. இந்த ஸ்டிரைக் காரணமாக பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன. உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், உள்ள பல தொழிற்சாலைகள் ஊழியர்களுக்கு விடுமுறை விட்டு நிறுவனங்களை தற்காலிகமாக மூட ஆரம்பித்துள்ளன.
தொழில் நகரமான ஓசூரில் பல்வேறு நிறுவனங்களுக்கு பத்து நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. உற்பத்தி செய்த பொருட்களை அனுப்ப வழி இல்லாததால் உற்பத்தியை நிறுத்தி விட்டனர். தேவையில்லாமல் பொருட்கள் தேங்கி, நஷ்டத்தை சந்திப்பதை விட பத்து நாள் விடுமுறை விட்டால் மின்சாரச் செலவையும், பிற செலவுகளையும் குறைக்கலாமே என்ற எண்ணத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளதாம்.
அதேசமயம், இந்த விடுமுறையால் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் அவர்கள் வருந்துகின்றனர்.
ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறையினர் கடும் பாதிப்பையும், நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றனர். முட்டை உற்பத்தியாளர்களுக்கும் கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலும், எழும்பூர் ரயில் நிலையத்திலும் ஏராளமான சரக்குப் பெட்டிகள் தேங்கிக் கிடக்கின்றன.
கரும்பு வரத்து அடியோடு குறைந்தது ...
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமான கரும்பு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னைக்கு வர வேண்டிய கரும்புகள் தடைபட்டுள்ளன.
கடந்த ஆண்டெல்லாம் இந்நேரத்திற்கு கரும்புகள் லாரி லாரியாக வந்து குவிந்திருந்தன. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 6 லாரிகளில் மட்டுமே கரும்பு வந்துள்ளது. இதன் காரணமாக விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கட்டு கரும்பு கடந்த ஆண்டு 100 ரூபாய்க்கு விற்றது. ஆனால் இப்போதோ, கட்டு கரும்பு 150 ரூபாயைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. பொங்கல் நெருங்க நெருங்க மேலும் விலை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
அதேபோல, காய்கறிகளின் வரத்தும் மிக மிக குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு 500க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் பொங்கலுக்கு முன்பு வந்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 200 லாரி காய்கறிகள் மட்டுமே வந்துள்ளது.
அதேசமயம், தக்காளி வரத்து ஓரளவு திருப்திகரமாக இருப்பதால் அது மட்டும் பற்றாக்குறையில் இல்லை. விலையும் ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளதாக கோயம்பேடு மார்க்கெட் வட்டாரம் தெரிவிக்கிறது.
மஞ்சள், ஜவுளி, விசைத்தறி தொழில் என பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்லில் ரூ. 3 கோடி மதிப்பிலான முட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.