பொங்கல் பொருட்கள் கடும் விலை உயர்வு
சென்னை: பொங்கல் பண்டிகையின்போது பயன்படுத்தப்படும் கரும்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக பொருட்களின் வரத்து வெகுவாக குறைந்திருப்பதால் இந்த நிலை.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்த நிலையில் லாரி ஸ்டிரைக் தமிழகத்தை உலுக்கி எடுத்து வருகிறது.
இதன் காரணமாக தலைநகர் சென்னைக்கு வர வேண்டிய கரும்பு, மஞ்சள், பொங்கல் பானை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சரிவர வரவில்லை. வரத்துத குறைந்ததால் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக வர வேண்டிய காய்கறிகளும் சரிவர வரவில்லை. இருந்தாலும் கூட காய்கறிக்கு இதுவரை எந்த தட்டுப்பாடும் இல்லை. விலையும் தான் உயர்ந்துள்ளது.
கரும்பு வரத்து மிகக் மிகக் குறைவாக உள்ளதால் அதன் விலை கடுமையாக உள்ளது.
இதுவரை வெறும் 20 லாரி கரும்புகள்தான் கோயம்பேட்டுக்கு வந்துள்ளனவாம். இந்த முறை கரும்பு விலை கண்டிப்பாக இனிக்காது என்கிறார்கள் வியாபாரிகள்.
அதேபோல முந்திரிப்பருப்பு, திராட்சை, மஞ்சள் உள்ளிட்டவற்றின் விலையும் கடுமையாக உள்ளது.
இதுதவிர வெல்லம், பச்சரிசி, சேமியா, எண்ணை உள்ளிட்டவையும் விலை உயர்ந்து காணப்படுகின்றன.
புதுப் பொன்னி பச்சரிசி கிலோ ரூ. 23 ஆக உள்ளது. பழைய பச்சரிசி ரூ. 30 ஆக உள்ளது.
வெல்லம் கிலோ ரூ. 26, சேமியா ரூ. 30, சன் பிளவர் ஒரு பாக்கெட் ரூ. 62, உலர் திராட்சை கிலோ ரூ. 150, முந்திரிப் பருப்பு ரூ. 280 என தாறுமாறாக உள்ளது.
பொங்கல் பானைகளின் விலையும் கூட இந்த ஆண்டு அதிகமாகவே உள்ளது.