திருத்தணி சாமியாருக்கு பணம் கேட்டு வெடிகுண்டு மிரட்டல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பணக்கார சாமியாரிடம் ரூ. 50 லட்சம் கேட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை என்ற ஊரைச் சேர்ந்தவர் கேசவலு (60). அப்பகுதியில் கைலாசபிரம்மா என்ற கோவிலை கட்டி பராமரித்து வருகிறார்.
குறி சொல்வது, ஜோதிடம் பார்ப்பது, மாந்திரீகம் செய்வது என அவர் தொழில் செய்து வருகிறார்.
சாமியாராக இருந்தாலும் இவர் பெரும் பணக்காரர் ஆவார். 200 ஏக்கர் நிலம், பெட்ரோல் பங்க், டேங்கர் லாரி, சினிமா தியேட்டர், அரிசி மில், எடை மேடை என ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளன. ஏராளமான கடைகளையும் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். கோடிக்கணக்கில் இவருக்கு சொத்துக்கள் உள்ளன.
இந்த நிலையில் இவருக்குச் சொந்தமான சிவசக்தி பெட்ரோல் பங்க்குக்கு ஒரு கடிதம் வந்தது. இம்ரான், ஐஸ்வர்யா பேக்கரி, நெ. 58, செவன்த் கிராஸ் ரோடு, பெங்களூர் என்ற முகவரி அதில் இடம் பெற்றிருந்தது.
அக்கடிதத்தில், வருகிற 16ம் தேதிக்குள் 50 லட்சம் ரூபாய் தரவேண்டும். இந்தப் பணத்தை தருவது சாத்தியம் இல்லை என்றால் 80 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வழங்கவேண்டும். இதனை எங்கே கொண்டு வந்து தரவேண்டும் என்பதை இரண்டு நாளில் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.
இதுகுறித்து போலீசுக்கு தெரிவித்தால் வீட்டில் குண்டுவீசி குடும்பத்தோடு கொன்று விடுவோம். பெட்ரோல் பங்க் மற்றும் கோவிலை குண்டு வைத்து தகர்த்து விடுவோம். உங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என கூறப்பட்டுள்ளது.
அதிர்ச்சி அடைந்த கேசவலு சாமியார் மர்ம கடிதத்தை திருத்தணி காவல் நிலையத்தில் கொடுத்து புகார் செய்தார்.
திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் உத்தரவின் பேரில் திருத்தணி இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிவு செய்து ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்.
உள்ளூர் நபர் ஒருவர் தான் இந்த கடிதத்தை எழுதியிருக்க வேண்டும் என்றும் திசை திருப்பும் வகையில் பெங்களூர் முகவரி தரப்பட்டுள்ளது என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications