தூத்துக்குடி கப்பல் ஊழியர் சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்தல்
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த தெரசையா பர்னாந்து என்கிற கப்பல் ஊழியர், கென்யாவில், சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மரக்குடி தெருவை சேர்ந்தவர் தெரசையா பர்னாந்து. கடந்த 15 ஆண்டுகளாக கென்யா நாட்டில் மும்பசா பகுதியில் உள்ள சதர்ன் இன்ஜீனியரிங் என்ற கப்பல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த மாதம் அல்பன்யாரா என்ற சிறிய மீன்பிடி கப்பலில் இவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அவருடன் மாலுமிகள், அதிகாரிகள், கப்பல் ஊழியர்கள் என மொத்தம் 11 பேர் கப்பலில் இருந்தனர். இதில் கென்யாவை சேர்ந்த 8 பேரும், இந்தியாவை சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.
கடந்த 7ம் தேதி கென்யா நாட்டு கடல் பகுதியில் கப்பல் சென்றபோது சோமாலியா நாட்டு கடல் கொள்ளையர்கள் நடுக்கடலில் அந்த கப்பலை மடக்கினர். பின்னர் அவர்களை கப்பலிலேயே சிறை வைத்தனர்.
தங்களுக்கு பணயத் தொகையாக பலகோடி ரூபாய் தந்தால் தான் விடுவோம் என்று கூறினர். பின்னர் கென்யாவை சேர்ந்த 8 பேரை கப்பலுடன் விடுவித்தனர்.
தெரசையா பர்னாந்து, விசாகப்பட்டிணத்தை சேர்ந்த சரவணன், கேரளாவை சேர்ந்த அந்தோணி உள்ளிட்ட 3 இந்தியர்களை மட்டும் பணயக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
இத்தகவலை சதர்ன் இன்ஜீனியரிங் கப்பல் கம்பெனி அதிகாரி பிலிம் என்பவர் பர்னாந்துவின் மனைவி சகாயசில்வாவிடம் நேற்று தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதனால் சகாயசில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.