மன்னார்குடி: வீடுகளுக்குள் புகுந்த லாரி-9 பேர் பலி
திருவாரூர்: மன்னார்குடி அருகே இன்று அதிகாலை வீடுகளுக்குள் லாரி புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 5 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 9 பேர் பரிதாமாக பலியாயினர்.
திருச்சியில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு நேற்றிரவு லாரி சென்றது. லாரியை ஜெயபால் (29) என்பவர் ஓட்டிச் சென்றார்.
தஞ்சை- மன்னார்குடி சாலையில் கலவாய்க்கரை என்னுமிடத்தில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சென்ற போது டிரைவர் ஜெயபாலின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.
சாலையின் இடதுபக்கம் இருந்த குடிசை வீடுகளுக்குள் லாரி புகுந்தது. இதில் சிவசாமி, நாடிமுத்து, நடராஜன் ஆகியோரின் வீடுகள் தரைமட்டமாயின.
இதில், சிவசாமியின் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி கனகவள்ளி (38), மகள் கனிமொழி (14), மகன் சந்தோஷ் (12), அவரது மாமியார் சிந்தாமணி (80), உறவினர்கள் கோவிந்தம்மாள் (58), நடராஜன் (55), மற்றும் சித்ரா (28), அட்சயா (4) ஆகியோர் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாமாக உயிரிழந்தனர்.
இதில் சிவசாமி மட்டும் அதிரிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சிவசாமி வீட்டில் புகுந்த லாரி அருகில் இருந்த நாடிமுத்து வீட்டுக்குள்ளும் புகுந்ததில் நாடிமுத்துவின் மனைவி மல்லிகா (40), மகள் அபிராமி (22), மகன்கள் சுதாகர் ( 20), விவேக் (17) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மேலும் நிற்காமல் ஓடிய லாரி அதற்கு அடுத்திருந்த நடராஜன் என்பவரது வீட்டுக்குள்ளும் புகுந்ததில் நடராஜரின் மனைவி வசந்தா படுகாயமடைந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவர் ஜெயபால் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டிச் சென்றதால் தான், இந்த கோர விபத்து நடந்திருப்பது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications