தேவர் சிலை முன் மோதல்-போலீஸ் தடியடி
மதுரை: தேவர் சிலை முன்பாக பட்டாசு வெடித்ததில் இரண்டு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதி்ல் ஒரு போலீஸ் உட்பட 4 பேர் காயமடைந்தனர். 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த மூதாட்டி மூக்காயி மரணம் அடைந்தார். இவருக்கு இறுதி சடங்கு செய்வதற்காக ஒரு பிரிவினர் அங்குள்ள குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றனர். அதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்க, பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் குளத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு இறுதி சடங்கு நடந்தது. அதன் பிறகு மூக்காயியின் உடலை மயானத்துக்கு எடுத்து சென்றனர்.
அப்போது அங்குள்ள தேவர் சிலை அருகே பட்டாசு வெடிக்கப்பட்டது. இதற்கும் மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த நிலையில் திடீரென கல்வீச்சு ஏற்பட்டது. இருபிரிவினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர்.
அமைதி காக்கும்படி போலீசார் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்காததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் இரு பிரிவினரும் கலைந்து நாலா புறமும் சிதறி ஓடினர்.
இந்த கல்வீச்சு சம்பவத்தில் போலீஸ்காரர் ஆறுமுகம் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இவர்கள் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருபிரிவை சேர்ந்த 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications