முல்லைத்தீவைப் பிடிக்க 50,000 இலங்கை வீரர்கள்
விடுதலைப் புலிகள் வசம் உள்ள முக்கியப் பகுதிகளைப் பிடித்து விட்ட ராணுவம் தற்போது முல்லைத்தீவையும் பிடிக்க மும்முரமாகி வருகிறது.
முல்லைத்தீவை சுற்றி வளைத்து வரும் ராணுவம், 50 ஆயிரம் வீரர்களுடன் கடைசி யுத்தத்தைத் தொடுக்க தயாராகி வருகிறதாம்.
விடுதலைப் புலிகளை 500 சதுர கி.மீ பரப்பளவில் ஒரு பெட்டி வடிவில் சுற்றி வளைத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஏடு வெளியிட்டுள்ள செய்தி ...
இலங்கைப் படையினரின் 8 டிவிசன்கள் கொண்ட 50,000 பேருடன் முல்லைத்தீவு நோக்கிய தாக்குதலுக்கு தயாராகி வருகின்றன. அவர்கள் விடுதலைப் புலிகளை 500 சதுர கி.மீ பரப்பளவில் ஒரு பெட்டி வடிவில் சுற்றி வளைத்துள்ளனர்.
இறுதிக் கட்ட நடவடிக்கை ஏற்கனவே தொடங்கி விட்டது. படையினரின் முன்னணி நிலைகளை நகர்த்தி வருகின்றது. அதே சமயம் கடந்த வாரங்களில் படையினர் தமது ஆயுத வளங்களையும் அதிகப்படுத்தியுள்ளனர்.
இலங்கையின் வரலாற்றில் இதுவே படையினர் குறுகிய பரப்பளவில் அதிகளவில் குவிக்கப்படும் முதல் நடவடிக்கையாகும்.
படையினர் பெரும் படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே சமயம் சிறிய தாக்குதல்களையும் சிறப்பு படையணிகள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்
நாள் ஒன்றிற்கு 10 முதல் 15 விடுதலைப் புலிகளையாவது கொல்வது என்பது தான் இந்தப் படையணிகள் ஒவ்வொன்றின் கட்டளை அதிகாரிகளின் திட்டம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.