பஸ்களை தாக்கியது சிறுத்தைகள் அல்ல-ஜெயலலிதா
சென்னை: பஸ்கள் மீது தாக்குதல் நடத்தி பொதுச் சொத்துகளை சேதப்படுத்தும் அளவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் ஆட்கள் யாரும் இல்லை. இந்த வன்முறைச் செயல்களை திமுகவைச் சேர்ந்த மர்மக் கும்பல்கள் தான் நிகழ்த்தியிருக்கின்றன என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதிய 'கான்ஸ்பிரசி தியரி'யை கூறியுள்ளார்.
திருமாவளவன் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியதிலிருந்து, சில சமூக விரோத சக்திகள் தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு பேருந்துகளை தீயிட்டுக் கொளுத்தியும், பெட்ரோல் குண்டுகளை வீசியும், கற்களை வீசியும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த வன்முறைச் செயல்களின் மூலம் ஏராளமான அப்பாவி பொது மக்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நான்கு அரசுப் பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் கற்களை எரிந்து அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
வன்முறையில் ஈடுபட்டோர் மீது நான்கு நாட்களாக நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் வழக்கம் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது காவல் துறை.
18ம் தேதியன்று திருமாவளவன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்த பிறகு, தமிழக காவல் துறை தலைமை இயக்குனர், பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையில் ஈடுபடும் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும், பஸ் எரிப்பு மற்றும் கண்ணாடி உடைப்பு சம்பவங்களில் ஈடுபடுவோரை, தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக நேற்று பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பது மக்களின் சந்தேகத்தை நிரூபிக்கும் வகையில் உள்ளது.
திருமாவளவனின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதும், தமிழ்நாட்டில் உள்ள மக்களை அச்சுறுத்தியதும், காயப்படுத்தியதும் தான் மிச்சம்.
தமிழகத்தின் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தும் அளவுக்கும், பொதுமக்களை காயப்படுத்தும் அளவுக்கும், அச்சுறுத்தும் அளவுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் ஆட்கள் யாரும் இல்லை.
நான்கு நாட்களாக தமிழக மக்களை காயப்படுத்தியும், அரசுப் பேருந்துகளை எரித்தும், கல் வீசியும் சேதப்படுத்தியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை ஏதும் எடுக்காமல், உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வழியாக முடிந்த பிறகு "தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்'' என்று காவல் துறைத் தலைமை இயக்குனர் அறிவித்ததில் இருந்தே, இந்த வன்முறைச் செயல்களை திமுகவைச் சேர்ந்த மர்மக் கும்பல்கள் தான் நிகழ்த்தி இருக்கின்றன என்பது தெளிவாகியுள்ளது.
அரசுக்கு ஏற்பட்ட இழப்பை கருணாநிதி தன் சொந்த பணத்திலிருந்து ஈடு செய்வாரா? அல்லது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிடம் இருந்து வசூல் செய்வாரா? என்பதை நாட்டு மக்களுக்கு கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த வகையி்ல் பார்த்தால், தர்மபுரியில் மாணவிகளோடு சேர்த்து பஸ்ஸை எரித்தது நைஜீரிய தீவிரவாதிகள் போலிருக்கிறது!!.