சட்டசபை கூடியது: ஆளுநர் உரை-அதிமுக கூட்டணி புறக்கணிப்பு

இன்றைய கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் போக்கை கண்டித்து பாமக உறுப்பினர்கள் கருப்பு சட்டைகள் அணிந்து வந்தனர்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று காலை ஒன்பதரை மணிக்கு ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் உரையாற்றத் தொடங்க எழுந்தபோது உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக கூறி விட்டு அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வெளியேறினர். இதையடுத்து ஆளுநர் தனது உரையைப் படிக்கத் தொடங்கினார்.
சபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,
திருமங்கலம் இடைத்தேர்தலில் காவல் துறை துணையோடு கொலை வெறி தாக்குதல் நடத்தி அதிமுகவினர் மீது பொய் வழக்கு புனைந்து, ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் செயற்கையான தேர்தல் முடிவை உருவாக்கிய முதல்வரை கண்டித்தும்,
விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத, மின் வெட்டுக்கு தீர்வு காணாத, பொருளாதார மந்த நிலைக்கு காரணமான, மணல் கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தலை ஊக்குவிக்கின்ற, தீவிரவாத செயலுக்கு ஊக்கமளித்து தமிழகத்தை ஆயுத காடாக மாற்றியுள்ள திமுக அரசை கண்டித்தும் அதிமுக உறுப்பினர்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.
மதிமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் கூறுகையில்,
இலங்கையில் ஈழத் தமிழர்களை ஒடுக்க இந்திய அரசு துணை போவதை கண்டிக்கிறோம். சட்டசபையில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு குப்பைத் தொட்டியில் வீசி விட்டது.
திருமங்கலத்தில் ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாயும், மிக்ஸி, கிரைண்டர், பழனி பஞ்சாமிர்தம், திருநெல்வேலி அல்வா ஆகியவற்றை கொடுத்தும், வன்முறை நிகழ்த்திய திமுகவை கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி கூறுகையில்,
திருமங்கலம் இடைத்தேர்தலில் நடைபெற்ற ஜனநாயக படுகொலை மற்றும் வன்முறையை கண்டிக்கிறோம். வெள்ள நிவாரண நிதியை சரியாக வழங்காததற்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை தட்டிக்கேட்காத தமிழக அரசின் நிலையைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ சிவபுண்ணியம் கூறுகையில்,
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் இயற்றியும் அதை மத்திய அரசு கண்டுகொள்வில்லை.
இந்த பிரச்சனையில் மத்திய அரசின் போக்கையும், மத்திய அரசை வலியுறுத்தாத மாநில அரசை கண்டித்தும், திருமங்கலத்தில் வரலாறு காணாத வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
ஜெ-விஜயகாந்த் வரவில்லை:
இன்றைய கூட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வரவில்லை. அதேபோல ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் செல்வமும் வரவில்லை. அவரது ராஜினாமா கடிதம் இன்னும் ஏற்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை சபை மீண்டும் கூடும்போது முன்னாள் பிரதமர் வி.பி. சிங், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கிணத்துக்கடவு கந்தசாமி, விருதுநகர் பெ. சீனிவாசன், பிரணவநாதன், பெருமாள் ஆகியோரின் மறைவுக்கு பேரவையில் இரங்கல் செலுத்தப்பட்டு, அத்துடன் அவை ஒத்திவைக்கப்படும்.
திருமங்கலம் தொகுதியிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட லதா அதியமான் பதவி ஏற்பு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம், அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்த சட்ட மசோதா உள்ளிட்டவை இத்தொடரில் இடம் பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பேரவைக் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 30ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications