இலங்கை: செவிடான மத்திய அரசு-திருநாவுக்கரசர்
சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழக தலைவர்கள் தொடர்ந்து விடுத்த கோரிக்கைகள், வேண்டுகோள்கள், மத்திய அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது என பாஜக மூத்த தலைவரும், தேசிய செயலாளருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று திருநாவுக்கரசர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு நினைத்தால்தான் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியும். காலம் தாழ்த்தினால் வருத்தப்படும் நிலைதான் ஏற்படும்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பாமக மத்திய அரசை குறை கூறி இருக்கிறது. ஆனால் தமிழக தலைவர்கள் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருக்கிறது. மத்திய அரசிடம் முதல்வர் கருணாநிதி பலமாக வலியுறுத்த வேண்டும்.
கள் இறக்கும் போராட்டத்தை பாஜக ஆதரிக்கிறது. பூரண மதுவிலக்கு வரும் வரை கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.
சவூதி அரேபியாவில் 12 தமிழர்கள் உட்பட 16 இந்தியர்கள் விசா நீடிப்பு கிடைக்காததால் கடந்த 4 ஆண்டுகளாக தவிக்கின்றனர்.
அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடமும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வயலார் ரவியிடமும் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த தேர்தலில் தமிழகத்திலும், ஆந்திராவிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடம் கிடைத்ததால்தான் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடிந்தது. ஆனால் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்கும் இடங்கள் பாதியாக குறைந்து விடும். அந்த இடங்கள் பிஜேபிக்கு கிடைக்கும் என்று கூற முடியாது. ஆனால் பிஜேபிக்கு சாதகமாக இருக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications