அலுவலகம் தாக்குதல்: சிபிசிஐடி விசாரணை-சுவாமி
சென்னை: மதுரையில் உள்ள ஜனதாக் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பு தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் கூட்டமைப்பு' ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
விடுதலைப்புலிகளை எதிர்ப்பவர்களையும், மத்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுமட்டுமல்லாமல், தமுக்கம் மைதானம் அருகேயுள்ள தந்தி அலுவலகத்தை நோக்கி தமிழ் வக்கீல்கள் கூட்டமைப்பு புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்றார்கள்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் எனக்கு எதிராக கோஷமிட்டார்கள். கம்பு, செருப்பு போன்றவற்றுடன் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவில்லை.
பின்னர் அவர்கள், அப்பகுதியில் உள்ள ஜனதா கட்சி அலுவலகத்தை தாக்கினார்கள். இதில் மாவட்ட ஜனதா கட்சி தலைவர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. இதுவரை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆகவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டுமென்று உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, பிப்ரவரி 11ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். மேலும், இதுதொடர்பாக பதிலளிக்கும்படி டிஜிபி, சிபிசிஐடி ஐஜி, தல்லாகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications