தமிழகத்தில் 1 கோடி பேருக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்!
சென்னை: ஒரு கோடி ஏழை குடும்பத்தினர் ஒரு லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற உதவும் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
சட்டசபையில் ஆளுநர் பர்னாலாவின் உரையில் தமிழக அரசு இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது.
பர்னாலா தனது உரையில், தமிழக அரசு மருத்துவத்துறையில் சீரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் பயனாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும், மகப்பேறுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதில் நாம் நாட்டுக்கே முன்னோடியாக இருக்கிறோம்.
எனினும், புற்று நோய், இதய நோய், சிறுநீரக கோளாறு, மூளை மற்றும் முதுகுத்தண்டு பாதிப்பு, உயிருக்கு ஆபத்தான விபத்துகள் போன்ற பல கடுமையான நோய்களுக்கு ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது என்பதை நாம் அறிவோம்.
இந்த நோய்களில் இருந்து தங்கள் உயிரை காக்க அவர்களால் செலவு செய்ய இயலாது என்பதையும் அரசு நன்கு உணர்ந்து உள்ளது.
இதனால் ஏழை மக்கள் அனைவரும் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய கடும் நோய்களுக்கு இலவசமாக உயர் சிகிச்சை பெறும் வகையில், உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வரின் காப்பீட்டுத்திட்டம்' என்ற புதிய சுகாதார இன்சூரன்ஸ் திட்டம் இந்த ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற்றிட மருத்துவ காப்பீடு செய்யப்படும். இதற்கான காப்பீட்டுத்தொகையை அரசே செலுத்தும்.
இத்திட்டத்தால் தமிழகத்தில் உள்ள ஒரு கோடி ஏழை குடும்பத்தினர் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications