கோவை அருகே குட்டிகளுடன் சிறுத்தை தஞ்சம்
கோவை: கோவை அருகே மஞ்சூரில் சிறுத்தை தஞ்சமடைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மஞ்சூர்- கோவை சாலையை சீரமைக்கும் பணியில் சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
மட்டக்கண்டி அருகே உள்ள புதரை வெட்டி அப்புறப்படுத்தி கொண்டிருந்தபோது உள்ளிருந்து உறுமல் சப்தம் கேட்டுள்ளது. அச்சமடைந்த சாலைப் பணியாளர்கள் அஞ்சி ஓடினர்.
இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த குந்தா வனச் சரகர் ஜெகநாதன் புதரில் ஆய்வு செய்தபோது பிறந்து இரண்டே மாதங்களான நிலையில் இருந்த மூன்று குட்டிகளுடன் சிறுத்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜெகநாதன் கூறுகையில், குட்டிகள் பிறந்து இரண்டே மாதங்கள் ஆகியிருப்பதால் அவைகளால் நீண்ட தூரம் நடமாட முடியாது.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கலாம் என்றால் குட்டிகள் கூண்டில் ஏறாது. தாயைப் பிரிந்தால் குட்டிகள் இறந்துவிடும். சில தினங்களில் குட்டிகள் நடமாட தயாரானதும் அவை வேறிடத்துக்கு சென்று விடும். அதுவரையில் பொது மக்கள் யாரும் அப்பகுதியில் நடமாட வேண்டாம் என்று கேட்டுக் கெள்கிறோம்.
பொது மக்கள் நடமாடாமல் பார்த்துக் கொள்ளவும், சிறுத்தையை கண்காணிக்கவும் வேட்டை தடுப்பு காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.