ரோட்டில் மல்லுக்கட்டிய போலீஸ்-கைதி தப்பினார்
நெல்லை: ஒருவரை கைது செய்ய வந்த போலீசாரை அடையாளம் தெரியாமல் தாக்கினார் இன்னொரு போலீஸ்காரர். இவர்களது சண்டையில் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோடிவிட்டார்.
பாளையங்கோட்டை திம்மராஜாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். அய்யா தர்மயுக வழிப்பேரவை தலைவராக இருக்கும் இவர் பொதுமக்களை கவர்வதற்காக பல்வேறு நூதன போராட்டங்களை நடத்துவார்.
பெரும்பாலும் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே இவரது போராட்டங்கள் நடைபெறும். இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வந்தது.
சமீபத்தில் டாக்டர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் அவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனி்ல் வெளியே வந்த பாலமுருகன் தனது போராடடங்களை தொடர்ந்து நடத்தி வந்தார்.
இதையடுத்து அவர் மீதுள்ள வழக்குகளின் அடிப்படையில் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் சாமாதனபுரம் அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்த பாலமுருகனை மப்டி உடையில் இருந்த பாளையங்கோட்டை ஏட்டுகள் குமரேசன், கிருஷ்ணசாமி ஆகியோர் மடக்கி பிடித்து ஆட்டோவில் ஏற்றினர்.
இதை பார்த்த பாளையங்கோட்டை உதவி கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஏட்டு ஜெசு என்பவர் கிருஷ்ணசாமி, குமரேசனை போலீஸ்காரர்கள் என்று தெரியாமல் யாரோ ஒருவரை ரவுடிகள் அடித்து ஆட்டோவில் கடத்தி செல்வதாக நினைத்து அவர்களை வழிமறித்து பாலமுருகனை காப்பாற்ற முயன்றார்.
அப்போது 3 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜெசுவை ஏட்டு என்று தெரியாத கிருஷ்ணசாமி, குமரேசன் ஆகியோர் அவரை அடித்து உதைத்தனர். கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்ட பாலமுருகன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
அவர் தோளில் போட்டிருந்த துண்டை கைப்பற்றிய போலீசார் அதை வைத்து ஜெசுவின் கைகளை கட்டி சாமாதானபுரத்தில் உள்ள காவல் துறை கட்டுபாட்டு அறைக்கு இழுத்து சென்றனர்.
தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் வந்து விசாரணை நடத்தினார். அப்போதுதான் ஜெசு உள்ளிட்ட 3 பேரும் போலீஸ்காரர்கள் என்று தெரிய வந்தது. நடந்த சம்பவத்திற்கு ஒருவருக்கு ஒருவர் வருத்தம் தெரிவித்து கொண்டனர். தப்பியோடிய பாலமுருகனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications