காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார் அஸாருதீன்: மொய்லி
டெல்லி: முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகம்மது அஸாருதீன் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பமாக உள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் சமீபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, வீரப்ப மொய்லி மற்றும் சீனிவாஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் காங்கிரஸில் சேரவிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
இதுகுறித்து வீரப்ப மொய்லி கூறுகையில், அஸாருதீன் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் எங்கு போட்டியிட்டால் சரியாக இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவை அஸாருதீன் சந்தித்தபோது அந்தக் கட்சியில் அவர் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சேரவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸில் சேர அஸாருதீன் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை காங்கிரஸில் அவர் சேர்ந்தால், ஹைதராபாத்தில் அவர் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
கங்குலிக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் அஸாருதீன். 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2000மாவது ஆண்டு சூதாட்டத்தில் சிக்கி நிரந்தரமாக கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.