நோட்டு, காசு என்று தான் ஜெ.வுக்கு நினைப்பு போகிறது: கருணாநிதி
சென்னை: என்னை விமர்சிக்கும்போது கூட ஜெயலலிதாவுக்கு காசு, நோட்டு என்றுதான் நினைப்பு போகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆளுநர் உரை குறித்து ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் கூறியுள்ள கருத்துக்கள் குறித்து கேள்வி பதில் பாணி அறிக்கையில் முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பதில்:
கேள்வி: தமிழக அரசின் கவர்னர் உரையில் இலங்கை போர் நிறுத்தம் பற்றி குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தொல்.திருமாவளவன் சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி: கவர்னர் உரையில் பக்கம் 3, பத்தி 5-ல் "பக்கத்து நாடான இலங்கையில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு பசி பட்டினியால் இலங்கை தமிழ் பெருமக்கள் வாடுகிறார்கள்'' என்றும், "இலங்கையில் நடைபெறும் போர், பிரச்சினையை தீர்க்க உதவாது என்ற கருத்தை வலியுறுத்தி வருகிற நமது இந்திய பேரரசு, பேச்சுவார்த்தை போன்ற உரிய வழிமுறை வாயிலாக, அந்த நாட்டில் அமைதி தவழ்வதற்கான முயற்சிகளை இனியும் காலந்தாழ்த்தாது மேற்கொண்டு நாளும் வதைபடும் இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்தவாறு இந்த அரசு கேட்டுக்கொள்கிறது'' என்றும் குறிப்பிட்டிருப்பதை ஆழ்ந்து படித்துப் பார்த்தால், போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் கவர்னர் உரையிலே வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
கேள்வி: கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள தொல்.திருமாவளவன் இந்தத் திட்டத்தை பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களோடு இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களோடு இணைந்து நடைமுறைப்படுத்த கூடாது என்று சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி: தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படும் இதுபோன்ற திட்டங்களை தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டப்படி யார் குறைந்த அளவிற்கு ஒப்பந்தப்புள்ளி கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் இந்தத் திட்டத்தை செயற்படுத்த ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் இன்சூரன்ஸ் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம்' தான் காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குகின்ற அதிகாரம் பெற்ற அமைப்பு.
அந்த மத்திய அரசின் சட்டரீதியான அமைப்பிடமிருந்து உரிமம் பெற்ற காப்பீட்டு நிறுவனங்கள் தான் தமிழக அரசின் சார்பில் கோரப்படும் ஒப்பந்தப் புள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள். எனவே இதில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் என்ற பாகுபாடெல்லாம் பார்க்க இயலாது என்பது தான் விதிமுறை. ஏழை-எளிய மக்களுக்காக அரசினால் கொண்டுவரப்படும் இதுபோன்ற நல்ல திட்டங்களை வரவேற்க மனம் வராவிட்டாலும், சந்தேகங்களை எழுப்பாமல் இருப்பது நல்லது.
ராமதாஸ் என் உடன் பிறப்பு
கேள்வி: கவர்னர் உரை, "கலைஞர் கடிதம்'' போல் இருக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி: அவரும், என் உடன்பிறப்புகளில் ஒருவராக இருந்து பாராட்டியிருப்பதற்கு மகிழ்ச்சி.
கேள்வி: கவர்னர் உரையில் குறைகள் அதிகமாகவும், நிறைகள் குறைவாகவும் உள்ளது என்று டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?
பதில்: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பார்களே, அதை நினைத்துக்கொண்டு, அளவுக்கு மிஞ்சி நிறைகள் இருப்பதாக சொல்லக்கூடாது' என நினைத்திருப்பார். குழம்பில் கூட உப்பு ஒர் அளவாக இருந்தால்தானே சுவைக்கும்! எனவே குறைவாகவாவது நிறைகள் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டதற்காக நன்றி.
கேள்வி: கவர்னர் அறிக்கை குறித்து எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதா, அதனை செல் அரித்த செல்லாத நோட்டு, செலவழிக்க இயலாத பித்தளை காசு என்றெல்லாம் வர்ணித்திருக்கிறாரே?
கருணாநிதி: அதிலே கூட "நோட்டு'', "காசு'' என்று தான் அவருக்கு நினைப்பு போகிறது.
கேள்வி: மதுவிலக்கு பிரச்சினையில் முதல் படியிலேயே இருப்பதாக டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி: படிகளில் ஏறும்போது ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications