திருமங்கலத்தில் வென்றது 'காந்தி'தான்: விஜயகாந்த் அதிரடி
விழுப்புரம்: திருமங்கலத்தில் கிடைத்த வெற்றி திமுக சாதனைக்குக் கிடைத்த வெற்றி அல்ல. காந்திக்குக் கிடைத்த வெற்றி. அதாவது ரூபாய் நோட்டுகளுக்கு கிடைத்த வெற்றி. ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் வீதம் ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்து தேர்தலில் வெற்றிப்பெற்றிருக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட தேமுதிக முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.ஆர். செழியனின் சகோதரர் எஸ்.பி.ஆர். அன்பரசு - சரண்யா திருமண விழா கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மனைவி பிரேமலதாவுடன் திருமணத்தில் கலந்து கொண்டார் விஜயகாந்த். பின்னர் மண்டபத்திற்கு அருகே கட்சி நிதியளிப்புக் கூட்டம் நடந்தது.
பின்னர் விஜயகாந்த் கூட்டத்தினரிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், திருமங்கலம் தேர்தலோடு விஜயகாந்த் துவண்டு விட்டார். இனி எழுந்திருக்க மாட்டார் என்றார்கள். நான் துவண்டு போக மாட்டேன். எனக்கு தோல்வி பயமும் கிடையாது.
திமுகதான் உண்மையில் பயந்து போயிருந்தது. இது திமுக சாதனைக்குக் கிடைத்த வெற்றி அல்ல. காந்திக்குக் கிடைத்த வெற்றி. அதாவது ரூபாய் நோட்டுகளுக்கு கிடைத்த வெற்றி. ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் வீதம் ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்து தேர்தலில் வெற்றிப்பெற்றிருக்கிறார்கள்.
இடைத்தேர்தல்களின் போது, தி.மு.க., அ.தி.மு.க. தான் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர். பொது தேர்தலில் வெற்றி பெறட்டுமே பார்க்கலாம்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்காக தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதாக கூறினார்கள். அது என்ன ஆச்சு? இலங்கை தமிழர்களுக்காக மிக முக்கிய தீர்மானம் என்றார்கள். அது என்னவென்றால் பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் என்றார்கள்.
கடந்த 2006 தேர்தலின்போது நான் கூறிய வாக்குறுதியான அனைவருக்கும் மருத்துவ திட்டம் என்ற இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை தமிழக முதல்வர் தற்போது 1 கோடி பேருக்கு அறிவித்துள்ளார்.
நான் கூறிவரும் திட்டங்களை தான் தி.மு.க. அரசு செய்துவருகிறது. இனிமேல் திட்டங்களை முன்னதாக அறிவிக்கமாட்டேன். பிப்ரவரி 2-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளிவர உள்ளது. இந்த பட்டியலில் உங்களின் பெயர்களை நீக்கி விடுவார்கள். இதை தடுக்க கட்சி நிர்வாகிகள் விழிப்போடு இருக்க வேண்டும்.
சுட்டுப் போட்டாலும் கூட்டணி கிடையாது ..
பொதுமக்களுக்கு நல்லது செய்வோம் என்று எழுதி கொடுக்கும் மத்திய கட்சிகளுடன் தான் கூட்டணி அமைப்போம். ஊழல் கொண்டுள்ள மாநில கட்சிகளுடன் சுட்டு போட்டாலும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். மக்களை ஏமாற்றத்தான் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.
விஜயகாந்திடம் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். நான் நினைத்தால் ஒரே மாதத்தில் ஒவ்வொரு தொண்டரிடமும் நிதி உதவி பெற்று ரூ.100 கோடி திரட்ட முடியும். பணம் சம்பாதிக்கும் ஆசை இல்லை. அந்த ஆசை இருந்தால் வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்க மாட்டேனா? ஓட்டு போடுபவர்களை விலைக்கு வாங்கிவிடலாம். ஆனால் எனது தொண்டர்களை யாரும் விலைக்கு வாங்கமுடியாது.
தி.மு.க., அ.தி.மு.க. என்னை அழிக்க முடியாது, நெருங்க முடியாது. அன்பு உள்ளம் கொண்ட ஏழை மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். ஊருக்கு 10 பேர் இருந்தால் நாட்டை திருத்தி காட்டுவேன் என்றார் விவேகானந்தர். இன்று ஊருக்கு ஆயிரம் பேர் இருக்கும் தே.மு.தி.க. தொண்டர்களை கொண்டு இந்த நாட்டை மாற்றி காட்டுவேன் என்றார் விஜயகாந்த்.