மாணவியின் கூந்தலை வெட்டி ஈவ்டீசிங்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பள்ளி மாணவியின் கூந்தலை வெட்டி, துப்பட்டாவை பறித்து ஈவ்டீசிங் செய்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது மூலச்சல் அரசினர் உயர்நிலைப் பள்ளி.
இந்தப் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வரும் மாணவி மீரா என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை ஒயாஸ் (20), ஐய்யப்பன் (22) என்ற வாலிபர்கள் பள்ளிக்குச் செல்லும் போது கேலி செய்துள்ளனர்.
மேலும், மாணவி அணிந்திருந்த துப்பட்டாவை இழுத்துள்ளனர். இதில் ஒயாஸ் என்பவர் காங்கிரஸ் பிரமுகரின் மகன் ஆவார்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாணவியின் தந்தை இது குறித்து அந்த இளைஞர்களின் வீடுகளுக்குச் சென்று புகார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத 2 பேர் மாணவியை வழிமறித்து, அவரது கூந்தலை வெட்டியும், துப்பட்டாவை பறித்தும் அராஜகம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியை, மற்றும் மாணவியின் பெற்றோர்கள் காவல் துறையினர்க்கு தெரிவித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.