திருமங்கலம்: 19 மண்டல அலுவலர்களுக்கு நோட்டீஸ்
மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது வாக்களிக்கத் தேவையான ஆவணங்களின் விவரங்களை உரிய முறையில் பரிசோதிக்கத் தவறிய வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள 19 மண்டல அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவின் போது சுமார் 10 வாக்குச் சாவடிகளுக்கு வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள ஓர் அதிகாரி வீதம் மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், மத்திய அரசு ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் நடைபெற்ற பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ் புக், ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
அவ்வாறு வாக்களிக்கும் போது அந்த ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கபடவில்லை.
குறிப்பாக ஓட்டுநர் உரிமம் என்றால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமம் எண், வங்கி பாஸ் புக் என்றால் அதற்குரிய எண் ஆகியவற்றை வாக்குச் சாவடியில் உள்ள ஊழியர்கள் குறித்து வைத்து, வாக்குப்பதிவு முடிந்த பின்பு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த பணிகள் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் முறையாக மேற் கொள்ளப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் வாக்குப் பதிவின் போது பணியாற்றிய 19 மண்டல அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பத்து தினங்களுக்குள் உரிய பதில் அளிக்குமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.