சென்னை: குடிசை வீட்டில் தீ - 4 பேர் பரிதாப சாவு
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் குடிசை வீட்டில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மடிப்பாக்கம், பாலையா கார்டன் பகுதியில், ஃபிளாட் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டடத்தில் வாட்சமேனாக வேலை பார்த்து வந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த அசோக்குமார்.
இவர் தனது குடும்பத்தினருடன் தங்குவதற்காக அதே இடத்தில் குடிசை போட்டு தரப்பட்டிருந்தது. அங்கு அசோக் குமார், தனது மனைவி சிவசக்தி, மகன் சீமான், ஒன்றரை வயது மகன் மற்றும் மகள் சுகன்யாவுடன் தங்கியிருந்தார்.
சிவசக்தி சித்தாள் வேலை பார்த்து வந்தார். பகலில் அவர் வேலைக்குப் போய் விடுவார்.
நேற்று இரவு அசோக் குமார் குடும்பத்தினர் தூங்கப் போவதற்கு முன்பு கொசுவர்த்தி சுருளைப் பற்ற வைத்து விட்டுத் தூங்கினர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில், திடீரென குடிசையில் தீப்பிடித்துக் கொண்டது.
வேகமாக பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் பறந்தது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குடிசை வீடு எரிந்து சாம்பலாகி விட்டது. கடும் போராட்டத்திற்கிடையே குடிசை சிதிலங்களை அகற்றிப் பார்த்தபோது அசோக் குமார், அவரது மகன் சீமான், மகள் சுகன்யா ஆகியோர் கருகிக் கிடந்தனர்.
சிவசக்தியும், ஒன்றரை வயது குழந்தையும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தை இறந்து போய் விட்டது. சிவசக்தி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.