மாணவர்கள் போராட்டம வலுப்பெற வேண்டும்: வைகோ
சென்னை: இலங்கை தமிழர்களுக்காக போராடிவரும் தமிழக மாணவர்களின் போராட்டம் வலுப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது 1942ம் ஆண்டு சென்னை மாகாணம் முழுவதும் இருந்த மாணவர்கள் படிப்பைத் துறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா தலைமையில் 1963ம் ஆண்டு மொழிப் போராட்டம் நடந்தது. அப்போதும் மொழி காக்கும் உணர்வுடன் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1967ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கடந்த 42 ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது.
அதனால்தான் மாணவர்கள் எவருடைய தூண்டுதலும் இல்லாமல், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற உணர்வுடன், நம் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களை காக்க அறப்போரில் குதித்து உள்ளனர்.
மணவர்களுக்கு அரசியல் நோக்கம் கிடையாது, சுயநலம் கிடையாது. அவர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். தமிழ்நாட்டில் லட்சோபலட்சம் மாணவர்கள் படிப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் பயிலுகின்றனர்.
இலங்கைத் தீவில் தமிழ் இனத்துக்கே பேரழிவு நேரும் வகையில், சிங்கள இனவெறி அரசின் ராணுவம் கொலை வெறித் தாக்குதல் நடத்துகிறது. அதற்கு இந்திய அரசாங்கம் முழு உதவியும், ஆயுதங்களும் வழங்குகிறது.
அதற்கு மாநில அரசும் துணை நிற்கிறது. முதலில் எம்பிக்கள் ராஜினாமா என்றார். டெல்லி போகிறேன் என்று பொழுதை போக்கினார். பின்னர் பிரணாப் கொழும்புவுக்கு போவார் என்றார். தற்போது மக்களை ஏமாற்ற இது, இறுதி வேண்டுகோள் என்கிறார் கருணாநிதி.
மாணவர்களின் கிளர்ச்சி வலிமை அடைய வேண்டும். ஈழத்தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகத்துக்கு தமிழக மக்கள் அரசியல் ரீதியாக தண்டிப்பார்கள் என்ற அச்சம் மத்திய-மாநில அரசுகளுக்கு ஏற்படட்டும். அதன் மூலமாவது இந்திய அரசு செய்துவரும் துரோகத்தை நிறுத்தட்டும்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுமாறு ஜெர்மனி அரசு சொல்லி விட்டது. ஜப்பான் சொல்கிறது. இன்னும் பல நாடுகள் போரை நிறுத்த சொல்லி துடிக்கின்றன. ஆனால் அந்த நாடுகளுக்கு குறுக்கே நிற்பது இந்திய அரசு தான்.
தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறேன். இலங்கையில் சிங்கள அரசு நடத்தும் தமிழர் இன அழிப்பு யுத்தம். இந்திய அரசால் வகுக்கப்பட்ட சதித்திட்டம் ஆகும்.
திருச்சி சட்டக் கல்லூரியில் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது, மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கும் செயல்,
மாணவர்கள் நடத்திடும் அறப்போராட்டத்திற்கு அனைவரும் முழு ஆதரவு தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.