ஏர்வாடி: மன நலம் பாதித்த பெண் வைத்த தீயில் இரு பெண்கள் பலி
ஏர்வாடி: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மன நலம் பாதித்த பெண் வீட்டுக்கு தீ வைத்ததில் மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் உடல் கருகி பலியானார்கள். 8 பேர் உடல் கருகிய நிலையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்தவர் அப்துல்அலி(55). இவரது மனைவி மும்தாஜ் (50). அப்துல் அலி இறந்து விட்டார். இதனால் மன உளைச்சல் காரணமாக பட்டதாரிகளான தனது மகள்கள் விதவைபெண்ணான பர்கானா மற்றும் அன்சாரி பாத்திமா ஆகியோருடன் ஏர்வாடி தர்காவுக்கு வழிபாடு செய்ய வந்து இருந்தார். இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு தங்கி இருந்து அவர்கள் தர்காவுக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் பர்கானா, அன்சாரி பாத்திமா ஆகிய 2 பேரும் தங்கள் வீட்டில் வைத்து அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வந்தனர்.
இவர்கள் இருந்து வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில், கேரளாவை சேர்ந்த சுக்கூர் என்பவரின் மனைவியான மன நலம் பாதிக்கப்பட்ட ஹசீனா(30) என்ற பெண் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டு இருந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் குழந்தைகளுக்கு பர்கானாவும், அன்சாரி பாத்திமாவும் டியூஷன் எடுத்துக் கொண்டு இருந்தனர். பக்கத்து வீட்டில் சுக்கூர் வெளியே சென்று இருந்த நிலையில் அவரது மனைவி ஹசினா மண்எண்ணை கேன், தீப்பெட்டியுடன் திடீரென டியூஷன் நடந்த வீட்டுக்குள் புகுந்து மண்எண்ணை ஊற்றி அமர்க்களம் செய்தார்.
இதை பார்த்ததும் திகைத்துப்போன அக்காள்-தங்கை இருவரும் ஹசினாவை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது ஹசீனா கையில் இருந்து மண்எண்ணை கீழே கொட்டியது.
அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ஹசினா தீவைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி கதவை பூட்டி விட்டு ஓடிவிட்டார்.
இதில் வீட்டுக்குள் இருந்த பர்கானா, அன்சாரி பானு மற்றும் அங்கு டியூஷன் படித்துக் கொண்டு இருந்த குழந்தைகளும் தீயில் சிக்கினர். உடல் கருகி அலறி துடித்தனர்.
இந்த சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று அன்சாரி பானு, பர்கானா மற்றும் டிiசன் படித்த குழந்தைகள் சிம்ரின், கார்த்திகா (8), உம்முகலிமா (9), கல்கி, செய்யது முஸ்தபா (8), சாதிக் பாத்திமா (7) உள்ளிட்ட 10 பேரை மீட்டு மதுரை மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், அன்சாரி பானு, அவரிடம் டியூஷன் படித்த ஏர்வாடி செய்யது அபுதாகீர் என்பவரின் மகள் சுல்தான் பாத்திமா(12) ஆகியோர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். மேலும் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் ஏர்வாடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹசீனாவை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். ஹசீனாவுக்கும் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் மனநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏர்வாடியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தி்ல் 20க்கும் மேற்பட்ட மன நலம் பாதித்தோர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் இங்கு நடந்துள்ள துயரச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications