பதர்சயீத் பேசிய தமிழ் - குலுங்கியது சட்டசபை
சென்னை: தமிழில் சரளமாக பேச முடியாத அதிமுக எம்.எல்.ஏ பதர்சயீத் விடாப்பிடியாக தமிழில்தான் பேசுவேன் எனக் கூறி தட்டுத் தடுமாறி பேசிய தமிழைக் கேட்டு அனைத்து உறுப்பினர்களும் சிரித்தபடி அதை ரசித்தனர்.
தமிழக சட்டசபையில் நேற்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரண்டாவது நாளாக விவாதம் மேற் கொள்ளப்பட்டது.
அப்போது அதிமுக எம்.எல்.ஏ பதர்சயீத் பேசுகையில், திமுக ஆட்சி வெறும் 'அறிவிப்பு ஆட்சியாக' மட்டுமே இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். அதிமுக ஆட்சி ஒளிமயமாக
இருந்தது. மின்சாரம் தங்கு தடையின்றி கிடைத்தது. ஆனால், இப்போதைய நிலை ஊர் அறிந்தது. தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு வருகின்றன. நிறைய பேர் வேலை இழந்து வருகிறார்கள். வருமானமும் குறைந்துவிட்டது. ஆனால், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் மக்கள் வாழ வழிதெரியாமல் விழி பிதுங்கியுள்ளனர்.
தமிழகத்தில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை. சரியாக சொல்லப் போனால் இது தமிழ்நாடா என்று சந்தேகம் எழுகிறது.
அம்மா ஆட்சியில்தான் தமிழ்நாடு, தமிழ்நாடாக இருந்தது என்றார்.
இதைக் கேட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர், குறுக்கிட்டு, நீங்கள் பேசுவது தமிழ்தானா? என கிண்டல் செய்தனர். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
பதர் சயீத் கேலி செய்யப்பட்டதை அடுத்து அதிமுகவினர் பதர் சயீத்திடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று மெதுவான குரலில் சொன்னார்கள்.
ஆனால், பதர் சயீதோ எதையும் கண்டுகொள்ளவில்லை, நான் ஏன் ஆங்கிலத்தில் பேசவேண்டும். தமிழில்தான் பேசுவேன் என மைக்கில் சத்தம் போட்டு சொன்னார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஆவுடையப்பன், நீங்கள் பேசுவது தமிழ்தானா என்று இங்குள்ளவர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்றார்.
இதையடுத்து அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.
ஆனால் பதர்சயீதோ கொஞ்சமும் சளைக்காமல், தமிழில் சரிவர பேசமுடியாவிட்டாலும், தமிழில் நான் பேச முயற்சிப்பதை நீங்கள் ஊக்கப்படுத்தவேண்டும். சபாநாயகர் கூட இப்படி டிஸ்கரேஜ்' செய்தால் எப்படி?'' என்று கேட்டுவிட்டு, உரையை தொடர்ந்தார்.