விசுவமடுவை பிடித்தது இலங்கை ராணுவம்
முல்லைத்தீவு:விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த விசுவமடு பகுதியை முற்றிலுமாக தங்கள்வசம் கொண்டு வந்துள்ளதாகவும்,அங்கிருந்த விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான நீர்முழ்கி கப்பல் ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்குப் பகுதியில் இருந்த அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய ராணுவம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக கடற்புலிகளின் தலைநகரமாக கருதப்பட்ட முல்லைத்தீவை பிடித்தது.
தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகிறது. அவர்களுடன் இணைந்து இலங்கை விமான படையும் குண்டுகளை வீசி வருகிறது.
இந்நிலையில் புலிகளின் கடுமையான எதிர்தாக்குதலை முறியடித்து விசுவமடு நகரை தங்களது 58வது படைப்பிரிவு முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக ராணுவம் கூறியுள்ளது. அங்கு ஆயுதங்கள் கொண்டு செல்ல புலிகள் பயன்படுத்தும் வாகனம் ஒன்றையும், பேருந்து ஒன்றையும் அவர்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.
இது குறித்து ராணுவ செய்திகுறிப்பு ஒன்று கூறுகையில்,
புளியம்பொக்கனையிலிருந்து சுன்டிகுளமா என்ற இடம் வரை செல்லும் 10 கி.மீ., தூரம் உள்ள சாலை பகுதிகள் ராணுவம் வசம் வந்துள்ளன.
தற்போது ராணுவம் விசுவமடுக்கு தெற்கே உள்ள பிரமந்தால்குளமா நோக்கி முன்னேறி வருகிறது. புதுகுடியிருப்புக்கு அருகே இருக்கும் முத்தையன் காட்டுக்குளத்தில் 20 அடி நீளம் கொண்ட படகு ஒன்றை கைப்பற்றியுள்ளோம்.
ராணுவத்தினரின் கடும் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் தங்களுக்கு பாதுகாப்பான இடங்களாக கருதப்படும் தெரவில் குளம் மற்றும் உடையார்கட்டுக்குளம் ஆகிய பகுதிகளுக்குள் விடுதலைப்புலிகள் ஓடிவிட்டனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து ராணுவத்தினர் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதேபோல் விடுதலைப் புலிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட கதம்பகுளம் பாலத்தை ராணுவ பொறியாளர்கள் முழுவதுமாக சரிசெய்துவிட்டனர் என்கிறது அந்த செய்திக்குறிப்பு.