இலங்கை தமிழர் நிவாரண நிதி ரூ. 48 கோடி: அன்பழகன்
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் நிவாரண நிதி ரூ. 48.14 கோடியை தொட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதற்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இது குறித்து சட்டசபையில் அமைச்சர் அன்பழகன் கூறுகையில்,
இலங்கை போரில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவு நினைப்பவர்கள் 'இலங்கை தமிழர் நிவாரண நிதி' என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலை எடுத்து தலைமை செயலாளர், தமிழக அரசு, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தமிழக முதல்வர் அக்டோபர் 27ம் தேதி அறிவித்திருந்தார்.
அதற்கான வங்கி கணக்கு முதல்வர் பொது நிவாரண நிதிகள் உபகணக்காக தலைமைச் செயலகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் நிதித் துறையால் துவக்கப்பட்டது.
இந்த கணக்கிற்கு இதுவரை 48 கோடியே 14 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் ரொக்கமாக வந்துள்ளது. இது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான ரசீதுகள் நிதித்துறை மூலம் அனுப்பப்பட்டிருக்கின்றன.
ரூ.16 கோடியே 5 லட்சம் செலவில் இலங்கை தமிழர்களுக்கான நிவாரண பொருட்கள் கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம், நுகர்பொருள் வாணிப கழகம் ஆகியவை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான தொகை அந்த சங்கங்களுக்கு காசோலைகளாக வழங்கப்பட்டிருக்கிறது. கணக்கில்லாமல் நடைபெறுகிற ஆட்சி இப்போது நடைபெறவில்லை என்றார் அன்பழகன்












Click it and Unblock the Notifications