நெல்லையில் காஸ் தட்டுப்பாடு; பொதுமக்கள் அவதி
நெல்லை: லாரி ஸ்டிரைக் முடிவுக்கு வந்த போதிலும் நெல்லையில் காஸ் தட்டுப்பாடு இன்னும் ஓயவில்லை. மாறாக அதிகரித்துள்ளது. பதிவு செய்து 15 நாட்கள் ஆகியும் காஸ் சிலிண்டர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கு 3 லட்சத்து 52 ஆயிரம். இதில் 1 லட்சத்து 77 ஆயிரம் பேரிடம் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ளது. 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் இரண்டு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளனர்.
இவர்களுக்க பாரத் பெட்ரோலியம், இன்டேன் (இந்தியன் ஆயில்), எச்பி (இந்துஸ்தான் பெட்ரோலியம்) ஆகியவை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 23 டீலர்கள் மூலம் காஸ் வினியோகம் நடந்து வருகிறது.
பொதுவாக 21 நாட்களுக்கு ஒருமுறை காஸ் சிலிண்டருக்கு பதிவு செய்யலாம் என்ற நிலை மாறி தற்போது ஒவ்வொரு ஏஜென்சிகளும் ஒவ்வொரு நாட்கள் என கால அகவாசம் செல்லும் நிலை வந்து விட்டது. இதை எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலை உள்ளது.
கடந்த 5ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நடவடிக்கைகளால் எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் வேலை நிறுத்தம் 3 நாட்களுக்கு பிறகு வாபஸ் ஆனது. இந்த வேலை நிறுத்தங்களால் லாரி ஸ்டிரைக் முடிவுக்கு வந்தபோதிலும் காஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுபாடு நிலவுகிறது. இதனால் நெல்லையில் மக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.