திருச்செந்தூர் டூ சென்னைக்கு பிப். 8 முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ்
திருச்செந்தூர்: திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை பிப் 8ம் தேதியன்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடங்கி வைக்கிறார்.
அன்று காலை டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார் லாலு. பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் செல்லும் அவர் அங்கு பிற்பகலில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு செந்தூர் எக்ஸ்பிரசை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
இவ்விழாவில் ரயில்வே இணை அமைச்சர் வேலு, மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி, எம்பிக்கள், தென்னக ரயில்வே அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
பிப். 8ம் தேதி துவக்க விழா நடப்பதால் அதற்கு முன் ஏற்பாடுகள் தீவிரப்படுத்த மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அணில்சிங்கால், கோட்ட செயலாக்க மேலாயளர் வேலுமணி, கோட்ட பொறியாளர் ராபர்ட் மற்றும் உயர் அதிகாரிகள் இதுகுறித்து திருச்செந்தூரில் இன்று 30ம் தேதி ஆய்வு நடத்துகின்றனர்.
மாலையில் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராதிகா செல்வியுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
புதிய எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு தடம் எண்-6735, திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தடம் எண்-6736 ஆகியவை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நெல்லை எக்ஸ்பிரஸ் செல்லும் கார்டு லைனில் இயக்கப்பட உள்ளது.