பாக். எந்த தகவலும் தரவில்லை: பிரணாப்
டெல்லி: மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு, இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் தகவல் எதுவும் தரவில்லை. இது சம்பந்தமாக இதுவரை அதிகாரப்பூர்வமாக பதில் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவ விசாரணையில் பாகிஸ்தான் தொடர்ந்து குழப்பி வருகிறது. நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஹை கமிஷ்னர் ஷாகித் மாலிக் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து அவரிடம் தங்களது விசாரணை குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேசி கூறியுள்ளார்.
ஆனால், இதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், பாகிஸ்தான் ஹை கமிஷ்னர் மரியாதை நிமித்தமாக, இந்திய உள்துறை அமைச்சரை சிதம்பரத்தை சந்தித்துள்ளார். அப்போது அவர் மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக எந்த தகவலையும் அளிக்கவில்லை.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி உட்பட அந்நாட்டு அதிகாரிகள் இது தொடர்பாக மீடியாவில் பேட்டி கொடுத்ததன் மூலம் தான் தெரிந்து கொண்டோம்.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை பாகிஸ்தான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்பதை தற்போது நான் கோடிட்டு காட்ட விரும்புகிறேன். அவர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றார் பிரணாப்.