40 தொகுதிகளிலும் வெற்றி: அழகிரி பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் சபதம்
மதுரை: லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் வெற்றிபெற அண்ணன் அழகிரி பிறந்தநாளில் உறுதி ஏற்போம் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தென்மண்டல தி.மு.க.அமைப்பு செயலாளர் மு.க.அழகிரியின் 58வது பிறந்தநாள் விழா நேற்று மதுரையில் கொண்டாடப்பட்டது. காலை 7 மணிக்கு மு.க.அழகிரி தனது வீட்டில் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.
பின்னர் அவர் பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் ராஜாமுத்தையா மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்டார். பின்னர் வழக்கம்போல் இந்த ஆண்டும் 5 ஆயிரத்து 908 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாலையில் அய்யர்பங்களாவில் புறநகர் மாவட்ட தி.மு.க.சார்பில் 58 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அதில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
முதல்வர் கருணாநிதியை போல் அண்ணன் அழகிரி சொன்னதை செய்வார். செய்வதைத்தான் சொல்வார். திருமங்கலம் இடைத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் அ.தி.மு.க. போட்டியிட போகிறது என்று தெரிந்தது.
தேர்தல் பணிக்குழு தலைவரான அண்ணன் அழகிரியை திருமங்கலம் தொகுதிக்குள் வரக்கூடாது என்றும் அவர் பணி செய்யக்கூடாது என்றும் தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க.வினர் மனு கொடுத்தனர். அப்போதே நமக்கு புரிந்துவிட்டது. நாம்தான் வெற்றி பெறுவோம்' என்று தெரிந்து விட்டது. எடுத்த காரியத்தில் முழுமையான கடமையாற்றி வெற்றி பெற்றுவிட்டோம்.
நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றியதால் திருமங்கலம் இடைத்தேர்தலில் நல்ல வெற்றியை பெற்றோம் என்கிறார்கள். அதையும் தாண்டி எதற்கும் கவலைப்படாமல் இந்த இயக்கத்திற்காக ரத்தம் சிந்திக்கொண்டு இருக்கும் உடன்பிறப்புகள் இந்த தேர்தலுக்கு உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம்.
அண்ணன் சொன்னது போல் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்படுவோம். பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறிப்போம். அதற்காக உழைப்போம். இதற்கு அண்ணனின் இந்த பிறந்தநாளில் உறுதி ஏற்போம் என்றார் ஸ்டாலின்.
மு.க.அழகிரி பேசுகையில்,
நான் எனது பிறந்தநாளில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டேன். அதன்படி கடந்த 20 ஆண்டுகாலமாக ஏழை, எளிய மக்களுக்காக எனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறேன்.
அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எனது மகள் கயல்விழி ஆகியோர் பேசும்போது, 'திருமங்கலம் இடைத்தேர்தலில் நானும், எனது தம்பியும் சேர்ந்து பணியாற்றியதால்தான் பெரும் வெற்றியை பெற்றதாக' கூறினார்கள். அது உண்மைதான்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் பணிக்குழு தலைவராக அறிவித்தவுடன் தம்பி மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எனக்கு உறுதுணையாக இருந்து வந்தனர்.
தம்பி மு.க.ஸ்டாலின் அவ்வப்போது தொலைபேசியில் பல்வேறு அறிவுரைகளை தந்து வெற்றிக்கான வழிகளை சொல்லிக் கொடுத்தார். திருமங்கலம் தொகுதி வெற்றி சகோதரத்துவத்துக்கு கிடைத்த வெற்றி என்று எனது மகள் பேசினார்.
எனது பிறந்த நாளில் ஒரு செய்தியை சொல்ல நான் விரும்புகிறேன். நானும், எனது தம்பி ஸ்டாலினும் அண்ணா பள்ளியில் படித்து கலைஞர் வழியில் நடந்து வருகிறோம். கழக வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபடுவோம். எந்த துரோகிக்கும் இடம்தர மாட்டோம். இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் இருந்து செயல்படுவோம் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications