வீட்டுக்கடன்: ஸ்டேட் வங்கி வட்டி இனி 8%!!

சர்வதேச நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி பல நிதிச் சலுகைகளை அளித்தது. ஆனால் அந்த சலுகைகள் வணிக வங்கிகள் சரிவர அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தின.
இதனால் பொருளாதாரம் முடங்கிப் போகும் அபாயம் உள்ளதாகவும், வணிக வங்கிகள் உடனடியாக ரிசர்வ் வங்கியின் சலுகைகளை சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவித்தது ரிசர்வ் வங்கி.
இதைத் தொடர்ந்து உடனடியாக வட்டிக் குறைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது ஸ்டேட் வங்கி.
முதல் கட்டமாக வீட்டுக் கடன்களுக்கு 11 சதவிகிதம் வரை வசூலிக்கப்பட்டு வந்த வட்டியை இப்போது 8 சதவிகிதமாக்கியுள்ளது.
நாளை முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய வட்டி விகிதம் 12 வாரங்கள் அமலில் இருக்கும். அதன் பிறகு நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு புதிய விகிதம் அறிவிக்கப்படும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய அறிவிப்பால் ஏற்கெனவே கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு எந்த பலனும் இல்லை. புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
ஸ்டேட் வங்கியின் இந்த வட்டிக் குறைப்பைத் தொடர்ந்து இதர அரசு வங்கிகளும் வட்டிகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளன.












Click it and Unblock the Notifications