செயலிழந்தது செயற்கைக்கோள் - இஸ்ரோவுக்கு பின்னடைவு
பெங்களூர்: ஐரோப்பியாவின் யூடெல்சாட் என்ற நிறுவனத்துக்காக கடந்த மாதம் 20ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்திய டபிள்யு.டு.எம் செயற்கைகோள் செயலிழந்துவிட்டதாக தெரிகிறது. இதை சரி செய்யும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இது இஸ்ரோவின் வளர்ச்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இஸ்ரோ கடந்த 2006ல் ஐரோப்பாவின் ஈ.ஏ.டி.எஸ் என்ற நிறுவனத்துக்கு வர்த்தக ரீதியான செயற்கை கோள் ஒன்றை வடிவமைத்து செயல்படுத்தி தர ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதன்படி கடந்த டிசம்பர் 20ஆம் தேதி டபிள்யு.டு.எம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் கடந்த ஜனவரி 22ம் தேதி இரவிலிருந்து இது செயல்படவில்லை. தங்களின் சேவைகளை அது பூர்த்தி செய்யவில்லை. அது முற்றிலும் செயலிழந்துவிட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இஸ்ரோவின் செய்தி தொடர்பாளர் எஸ். சதீஷ் கூறுகையில், "இப்பிரச்சினை குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்சாட் 1சி மற்றும் 2டி செயற்கோள்களுக்கும் இது போன்ற பாதிப்பு ஏற்பட்டது பின்னர் அது சரி செய்யப்பட்டது என்றார்.
இது இத்திட்டத்தின் செயல் இயக்குனர் ஸ்ரீதரமூர்த்தி கூறுகையில், செயற்கைகோள் செயலிழந்தது துரதிருஷ்டவசமானது. தற்போது செயற்கைகோளில் மின் சப்ளையில் தடங்கல் ஏற்பட்டிருபப்தாக தெரிகிறது.
செயற்கோளை அந்நிறுவனத்திடம் கொடுப்பதற்கு முன் அதை சோதனை செய்தோம். அப்போது நன்றாக தான் இயங்கி கொண்டிருந்தது. இது எங்களது முதல் வர்த்தக செயற்கைகோள்.
தற்போது லண்டனை சேர்ந்த அவந்தி குரூப் நிறுவனத்துக்காக ஹைலாஸ் என்ற செயற்கோளை தயாரித்து வருகிறோம். டபிள்யு.டு.எம் செயற்கைகோளில் ஏற்பட்டுள்ள சிக்கலால் இது பாதிக்கப்படாது என்றார்.