முத்துக்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்ட- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சென்னை கொளத்தூரில் வசித்து வந்த பத்திரிக்கையாளர் முத்துக்குமார், ஈழத் தமிழர் இனப் படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசின் மெளனத்தைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளித்து உயிர் நீத்தார்.
அவரது உடல் கொளத்தூரில் உள்ள வணிகர் சங்க வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த பல்லாயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மாலை 3 மணிக்கு மேல் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின.
பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். கிட்டத்தட்ட ஏழரை மணி நேரம் இறுதி ஊர்வலம் நடந்தது.
மிகப் பெரிய தலைவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு வருவது போல பெரும் அளவில் மக்கள் திரண்டதால் ஊர்வலம் சென்ற பாதை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
காகித ஆலை சாலை, பெரம்பூர் ரயில் நிலையம், ஸ்டீபன்சன் சாலை, இளங்கோ நகர், அம்பேத்கர் கல்லூரி சாலை, எருக்கஞ்சேரி, வியாசர்பாடி மேம்பாலம் வழியாக மூலக்கொத்தளத்தில் உள்ள சுடுகாட்டை இறுதி ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பாஜக மாநில பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், பாமக எம்.எல்.ஏ வேல்முருகன், இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீக்காந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் வந்தவர்களில் 90 சதவீதம் பேர் இளைஞர்கள், மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி ஊர்வலப் பாதை நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வியாசர்பாடி பாலம் அருகே ஊர்வலம் வந்தபோது, அனைத்து கல்லூரிகளும் மாணவர் விடுதிகளும் மூடப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது பற்றிய தகவல் வெளியானது.
உடனே முத்துக்குமாரின் உடலை பாலத்தில் வைத்து விட்டு அங்கேயே அமர்ந்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இறுதி ஊர்வலம் தடைபட்டு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
பின்னர் அவர்களை தலைவர்கள் சமாதானப்படுத்தினர். இதையடுத்து மீண்டும் ஊர்வலம் தொடர்ந்தது. இரவு 10-45 மணி அளவில் மூலக்கொத்தளம் சுடுகாட்டை சென்று அடைந்தது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
11-10 மணிக்கு முத்துக்குமாரின் உடலுக்கு அவரது தந்தை குமரேசன் தீ மூட்டினார்.
இதைத் தொடர்ந்து சுடுகாட்டில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில் வைகோ, திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு, வெள்ளையன், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
ஊர்வலத்தில் பிரபாகரன் படம்
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பலரும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படம் மற்றும் புலிகளின் கொடி ஆகியவற்றை கையில் ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர்.
முத்துக்குமாரின் படத்தையும், புலிகள் இயக்க இலச்சினையின் பின்னணியில் வடிவமைத்து கொண்டு சென்றனர்.













Click it and Unblock the Notifications