4 மாதங்களில் 4 லட்சம் கோடி: ரிசர்வ் வங்கியின் சலுகை சாதனை!
டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தை, சர்வதேச பொருளாதார மநம்த பாதிப்பிலிருந்து காப்பாற்ற கடந்த 4 மாதங்களில் மட்டும் 4 லட்சம் கோடி நிதிச் சலுகைகளை வழங்கி சாதனைப் படைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
2008 செப்டம்பர் முதல் 4 மாதங்களில் ரிசர்வ் வங்கியின் பலவித வட்டிக் குறைப்பு நடவடிக்கையால் சுமார் ரூ.4 லட்சம் கோடி தொகை புழக்கத்துக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2008-09ம் ஆண்டுக்கான நிதிக் கொள்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான 4 மாதங்களில் நிதிச் சந்தையில் தாராள புழக்கத்துக்கு ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றின் காரணமாக இதுவரை ரூ.4.28 லட்சம் கோடி புழக்கத்துக்கு வந்தது.
செப்டம்பரில் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் இருப்பு வைக்க வேண்டிய தொகை மீதான (சிஆர்ஆர்) வட்டிக் குறைப்பின் மூலம் மட்டும் வங்கிகள் கடன்களை தாராளமாக அளிக்கும் வகையில் நிதிப் புழக்கம் ரூ.1.6 லட்சம் கோடி அதிகரிக்கப்பட்டது.
அது தவிர, பல்வேறு வழிகளில் வங்கிகளுக்கு மேலும் ரூ.63,000 கோடி நிதியை ரிசர்வ் வங்கி விடுவித்தது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடனுக்கான (ரெபோ) வட்டியையும் ரிசர்வ் வங்கி கடந்த 4 மாதங்களில் பலமுறை 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை குறைத்தது. அதனால் முறையே ரூ.80,000 கோடி, ரூ.60,000 கோடி நிதி வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டது.
வங்கி சாராத நிதி நிறுவனங்களின் சீரான செயல்பாடுக்காக சிறப்பு நிதித் திட்டத்தை சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்மூலம் நிதிச் சந்தையில் மேலும் ரூ.25,000 கோடி விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications