கஸாப் போலீஸ் காவல் பிப். 13 வரை நீட்டிப்பு
மும்பை: தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீர் கஸாப்பின் போலீஸ் காவல் பிப்ரவரி 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு உயிருடன் சிக்கிய ஒரே தீவிரவாதி கஸாப் மட்டுமே. தற்போது போலீஸ் காவலில் கஸாப் உள்ளான்.
அவன் மீது சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது உள்ளிட்ட மொத்தம் 12 வழக்குகள் போடப்படடுள்ளன.
சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய வழக்கில் இன்றுடன் அவனது போலீஸ் காவல் முடிவடைந்தது. இதையடுத்து குஜராத் மீன்பிடிக் கப்பலின் கேப்டனைக் கொன்ற வழக்கில் இன்று அவனை போலீஸார் காவலில் எடுத்தனர். அவனுக்கு பிப்ரவரி 13ம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கி மும்பை கோர்ட் உத்தரவிட்டது.
பாதுகாப்பு காரணம் கருதி, அவனை கூடுதல் மெட்ரோபாலியன் மாஜிஸ்திரேட் ஸ்ரீமங்களே முன்பு போலீஸார் ஆஜர்படுத்தவில்லை. மாறாக, நீதிபதி மற்றும் அரசு வக்கீல் தமல் ஆகியோர் கஸாப் வைக்கப்பட்டுள்ள ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நவம்பர் 26ம் தேதியன்று கஸாப் கைது செய்யப்பட்டான். அன்று முதல் அவன் போலீஸ் காவலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.