பாக். கேட்டால் கூடுதல் தகவல் கொடுக்கப்படும்: பிரணாப்
பெர்காம்பூர்: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் வேண்டும் என பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் அவர்களுக்கு அது தரப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை சமீபத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கியது. முதலில் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என கூறிய பாகிஸ்தான், பின்னர் அது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தது.
சமீபத்தில் பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து அவரிடம் தங்களது விசாரணை குறித்து தகவல்கள் தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேசி கூறினார்.
ஆனால், இதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்து விட்டார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் பெர்காம்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், பாகிஸ்தான் இதுவரை இந்தியாவிடம் எந்த தகவலும் அளிக்கவில்லை. அவர்களுக்கு தேவைப்பட்டால் கூடுதல் தகவல் அளிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications