தீக்குளிப்பு ஈழப் பிரச்சினைக்கு தீர்வாகாது: வைகோ
மதுரை: தீக்குளித்து உயிரை மாய்ப்பது ஈழப் பிரச்சினைக்கு தீர்வை அளிக்காது. எனவே அதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திண்டுக்கல் அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த ரவி என்பவர் நேற்று முன்தினம் வீட்டில் தீக்குளித்தார். இதுகுறித்து சர்ச்சை நிலவுகிறது.
குடும்பச் சண்டை காரணமாக ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால் ஈழத் தமிழர் பிரச்சினைக்காகவே தனது தந்தை தீக்குளித்ததாக பிரபாகரனும், ரவியின் மனைவி சித்ராவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மதுரை வந்த வைகோ, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவியைப் பார்த்து நலம் விசாரித்தார்.
சிகிச்சை முறை குறித்து விபரம் கேட்டறிந்தார். மனைவி, மகன்களிடம் ரவி விரைவில் குணமடைவார் என்று ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பள்ளப்பட்டி ரவி இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தான் தீக்குளித்து உள்ளார். அவரது மனைவி சித்ரா கூறிய சத்தியமான வார்த்தையில் இருந்து இதை அறிய முடிகிறது. ஆனால் போலீசார் குடும்ப சண்டை காரணமாக தீக்குளித்தார். மிரட்டி எழுதி இருக்கிறார்கள்.
இலங்கை பிரச்சினைக்காக முத்துக்குமார் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவத்தால் நாடே கொந்தளித்து உள்ளது.
இந்த கொடுமையை பத்திரிகையிலும், டி.வி.யிலும் பார்த்ததுடன் இலங்கை தமிழர் படும் சித்ரவதைகளை தாங்காமல் மனம் நொந்து தீக்குளித்து உள்ளார். தமிழர்களை காப்பாற்ற சொல்லி தீக்குளித்த ரவி உயிர் ஊசலாடுகிறது.
ஆனால் போலீசாருக்கு இதயம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. குடிசை வீட்டில் வசிக்கும் ரவி மீது, ஸ்டவ் வெடித்து தீப்பற்றியதாக பத்திரிகைகளுக்கு பொய்யான தகவலை சொல்லி இருக்கிறார்கள்.
இலங்கை பிரச்சினைக்காக தீக்குளிப்பது தீர்வு அல்ல.
இது தொடர்பாக எவ்வளவோ எடுத்துக் கூறியும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வருகிறது.
ரவி மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறுகிறார்கள். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். நான் அரசியல் ஆதாயம் தேடி வரவில்லை.
போலீசாரின் கொடுமை ராஜபக்சேயின் கொடுமையை விட மோசமாக உள்ளது. இலங்கை பிரச்சினைக்காக தற்கொலைக்கு துணிந்த ரவி விரைவில் குணமடைய வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications