லோக்சபா தேர்தல்: பல கட்ட வாக்குப்பதிவுக்கு கட்சிகள் எதிர்ப்பு
தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமிக்கும், தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவுக்கும் இடையிலான பனிப்போர் விஸ்வரூபம் எடுத்துள்ள பின்னணியில் நடந்த இன்றைய கூட்டத்தில் கோபாலசாமி, நவீன் சாவ்லா மற்றும் இன்னொரு தேர்தல் ஆணையரான குரேஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கீகரிக்கப்பட்ட 47 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவை வைத்துக் கொள்வது, வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க இன்றைய கூட்டம் கூட்டப்பட்டது.
ஏப்ரல் 8 மற்றும் மே 15ம் தேதிக்குள் தேர்தல் நடைபெறலாம் என்று குரேஷி, சில நாட்களுக்கு முன்பு லண்டனில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் பல கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சம் 2 கட்டமாக தேர்தல் நடத்தலாம் என்ற யோசனையையும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இன்றைய கூட்டத்தைத் தொடர்ந்து நாளை அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதையடுத்து வியாழக்கிழமை தலைமைச் செயலாளர்களுடனும், வெள்ளிக்கிழமை டிஜிபிக்களுடனும் ஆலோசனை நடைபெறவுள்ளது.