அதிமுக முன்னாள் எம்எல்ஏ பச்சமால் வீடுகளில் ரெய்டு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பச்சமால் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று சோதனை நடத்தினர்.
குமரி மாவட்டம் குளச்சல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பச்சைமால். தற்போது அதி்முக மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது வீடு நாகர்கோவில் அடுத்த தம்மத்துக் கோணத்தில் உள்ளது. ராஜாக்கமங்கலம் அடுத்த கணபதிபுரத்தில் ஐஸ் பிளாண்ட் நடத்தி வருகிறார். ஐஸ் பிளாண்ட்டை ஒட்டியும் இவருக்கு வீடு உள்ளது.
சமீபத்தில் நாகர்கோவில் பெஞ்சமின் தெருவில் ஒரு வீடு வாங்கியுள்ளார். இதை வாடகைக்கு எடுத்திருப்பதாகவும், கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து பச்சைமாலின் வீடுகள், ஐஸ் பிளாண்டுகள் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ராஜன் ராய், கண்ணன் மற்றும் போலீசார் மொத்தம் 4 பிரிவுகளாக பிரிந்து சோதனை நடத்தினர். பிற்பகல் வரை சோதனை நடத்தப்பட்டது.
பச்சைமால் தனது குடும்பத்தினரோடு தற்போது ஐஸ் பிளாண்ட் அருகில் உள்ள வீட்டில்தான் வசித்து வருகிறார். அந்த வீட்டில் இன்ஸ்பெக்டர் ராஜன்ராஜ் தலைமையிலான போலீசார் சோதனை போட்டனர். இதில் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.
அண்ணா நினைவு நாளையோட்டி அதிமுக சார்பில் இன்று காலை 10 மணிக்கு வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலநது கொள்ள வந்த அதிமுகவினருக்கு மாவட்ட செயலாளர் வீடுகளில் ரெய்டு நடப்பது தெரிய வந்ததும் எல்லோரும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.