மும்பையில் ரயில் மறியல் - போக்குவரத்து ஸ்தம்பித்தது
மும்பை: மும்பையில் ரயில் ஒன்று ரத்து செய்யப்பட்டதை அடுத்து பயணிகள் கூட்டமாக திரண்டு ரயில் மறியலில் ஈடுபட்டனர். கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது.
மும்பையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலை பயன்படுத்துகின்றனர். ஆனால் ரயில் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் கூட்டம் தொற்றிக் கொண்டு போகும். இதனால் பொரிவலி பகுதியில் இருந்து சர்ச்கேட் பகுதிக்கு அதிக ரயில்கள் விட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ரயில் ஒன்று மிகவும் தாமதமான காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கொதிப்படைந்த பயணிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மற்ற ரயில்களும் தாமதமாகின. மேற்கு ரயில்வே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து போனது.
ரயில்வே போலீசார் ஒருவர் கூறுகையில், காலை 9.18 மணிக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் பொரிவலியில் இருந்து ஒரு ரயிலை கூட வெளியேற அனுமதிக்கவில்லை.
இதனால் ரயில் போக்குவரத்து சுத்தமாக நின்று போனது. கூட்டத்தினர் எவ்வளவு கூறியும் கலைந்து போகாததை அடுத்து லத்திசார்ஜ் செய்து அகற்றப்பட்டது என்றார்.
அப்பகுதியின் காங்கிரஸ் எம்.பி.யும், பாலிவுட் நடிகருமான கோவிந்தா கூறுகையி்ல், கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதியில் அதிக ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பயணிகளை யாரோ வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தூண்டியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications