விடுதலைப் புலிகளை சில நாட்களில் அழித்து விடுவோம்: ராஜபக்சே பேச்சு
கொழும்பு: இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து விடுவோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கையில் இன்று 61வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொழும்பில் நடந்த நிகழ்ச்சியில், ராஜபக்சே பேசினார்.
புலிகள் தாக்கலாம் என்ற அச்சத்தால், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிகழ்ச்சி நடந்தது.
அதில் கலந்து கொண்டு பேசிய ராஜபக்சே, 25 ஆண்டு கால தீவிரவாதத்திற்கு இன்னும் சில நாட்களில் முற்றுப் புள்ளி வைக்கவுள்ளோம். விடுதலைப் புலிகளை இன்னும் சில நாட்களில் அழித்து விடுவோம். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
சில காலத்திற்கு முன்பு, இலங்கைப் படைகள் பெரும் தோல்வியை சந்தித்து வந்தன. கிட்டத்தட்ட அவர்கள் (புலிகள்) தங்களது இலக்கை எட்டி விடும் நிலையும் கூட நெருங்கி வந்தது. ஆனால் தற்போது இலங்கைப் படைகளுக்கு தொடர் வெற்றி சாத்தியமாகியுள்ளது.
நாட்டின் வட பகுதியில் வனப் பகுதியுடன் இப்போது விடுதலைப் புலிகள் சுருக்கப்பட்டு விட்டனர் என்றார் ராஜபக்சே.